சென்னை: டிஎன்பிஎல் தொடரில் கோவை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. சிறப்பாக ஆடிய திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் 46 பந்துகளில் 52 ரன்களை விளாசி அசத்தினார்.
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் கோவை அணியை எதிர்த்து திண்டுக்கல் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய கோவை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே சேர்த்தது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். திண்டுக்கல் அணி சார்பாக சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி மற்றும் விக்னேஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கேப்டன் அஸ்வின் 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்பின் 130 ரன்கள் என்ற எளிய இலக்குடன் திண்டுக்கல் அணிக்காக விமல் குமார் - சிவம் சிங் கூட்டணி களமிறங்கியது.
இதில் சிவம் சிங் 4 ரன்களிலும், விமல் குமார் 9 ரன்களில் ஆட்டமிழக்க, திண்டுக்கல் அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் வந்த அஸ்வின் - பாபா இந்திரஜித் கூட்டணி நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். தேவையான நேரத்தில் பவுண்டரி, சிக்சர் அடித்து அஸ்வின் ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்து கொண்டார். இதனால் 12 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 78 ரன்களை சேர்த்திருந்தது.
இதனால் திண்டுக்கல் வெற்றிக்கு 48 பந்துகளில் 52 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த நிலையில் சிறப்பாக ஆடிய இந்திரஜித் 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் வந்த சரத் குமார் அதிரடியாக சில பவுண்டரிகளை அடித்து ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். இன்னொரு பக்கம் சிறப்பாக ஆடிய அஸ்வின் 42 பந்துகளில் அரைசதம் அடித்தார். டிஎன்பிஎல் தொடரின் அஸ்வினின் ஹாட்ரிக் அரைசதம் இதுவாகும்.
பிளே ஆஃப் சுற்றின் 3 போட்டிகளிலும் அஸ்வின் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். பின்னர் திண்டுக்கல் வெற்றிக்கு 13 ரன்களே தேவைப்பட்ட நிலையில், அஸ்வின் 52 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் கடைசி 12 பந்துகளில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது கோவை கேப்டன் ஷாருக் கான் வீசிஅய் 18.2வது பந்தில் சரத் குமார் சிக்ஸ் அடித்து திண்டுக்கல் அணியை வெற்றிபெற வைத்தார்.
இதன் மூலமாக திண்டுக்கல் அணி முதல்முறையாக டிஎன்பிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக 2 முறை இறுதிப்போட்டிக்கு வந்த போது திண்டுக்கல் அணி தோல்வியை சந்தித்தது. அதேபோல் ஹாட்ரிக் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இருந்த கோவையின் பயணத்திற்கும் திண்டுக்கல் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.