சென்னை: டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கோவை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய கோவை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்களை சேர்த்தது. இந்த இலக்கை திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் எட்டி அசத்தியது.
சிறப்பாக ஆடிய திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 46 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கில் 4 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் மூலமாக ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். அதேபோல் டிஎன்பிஎல் தொடருக்கான நாயகன் விருதை ஷாருக் கான் கைப்பற்றினார்.

இந்த இறுதிப்போட்டியை காண்பதற்காக இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் அழைக்கப்பட்டிருந்தார். இதன்பின் சிறப்பாக விளையாடி ஆரஞ்ச் கேப் வென்ற சிவம் சிங், பர்பிள் கேப் வென்ற பொய்யாமொழி ஆகியோருக்கு ராகுல் டிராவிட் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதன்பின் வெற்றிபெற்ற திண்டுக்கல் அணி வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டினார்.
இந்த வெற்றி குறித்து திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பேசுகையில், இந்த வெற்றி ஒரு வேகத்தில் நடந்த சம்பவமாக பார்க்கிறேன். ஏனென்றால் சேலம் அணியிடம் தோல்வியடைந்த ஒரே அணி நாங்கள் மட்டும் தான். இந்த சீசனின் தொடக்கம் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. ஆனால் சரியான நேரத்தில் வெற்றிகளை பெறத் தொடங்கினோம். இந்த வெற்றியில் சரத் குமாரின் பங்கு மிகவும் அதிகம்.
மைதானத்தின் எந்த பக்கம் நிற்க வைத்தாலும் பாய்ந்து பாய்ந்து ஜான்டி ரோட்ஸ் போல் ஃபீல்டிங் செய்து கொண்டே இருந்தார். இந்த சீசனில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று யோசனையுடன் தான் வந்தேன். எங்கள் அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் கூட இல்லை. பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் இருவருமே எனது நண்பர்கள் தான். நான் தொடக்க வீரராக களமிறங்கி ஆட்டமிழந்த போது, என்னை கீழ் வரிசையில் விளையாட வைக்கலாமா என்று ஆலோசனை செய்தோம்.
ஏனென்றால் பிட்ச் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோவாக மாறிக் கொண்டே போனது. தற்போது கிரிக்கெட்டை ஒரு பக்கம் தள்ளி வைத்துவிடலாம். இந்த சீசனுக்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் என்னால் பயணிக்க முடிந்தது. அதேபோல் ஏராளமான வீரர்கள் தங்களின் திறமையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர். ரஹேஜா பேட்டிங்கில் அசத்தலாக செயல்பட்டார். சித்தார்த்தின் வேகம் சிறப்பாக உள்ளது. இந்தியாவின் எதிர்கால இடதுகை ஸ்பின்னராக இருப்பார்.
எத்தனை பேர் டிஎன்பிஎல் பார்க்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் லக்னோ அணிக்காக சித்தார்த் விளையாடியதற்கு டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டது தான் காரணம். அதேபோல் சிவம் சிங் மற்றும் சந்தீப் வாரியர் இருவரும் தங்களின் ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக டிஎன்பிஎல் தொடரின் முழு சீசனையும் விளையாட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் இந்த சீசனில் முழுமையாக விளையாட முடிந்தது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.