சேலம்: தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு அணிகளுமே குறைவாகவே ஸ்கோர் எடுத்தன. இந்த நிலையில் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
அதிலும், கோவை கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஜதவேத் சுப்ரமண்யம் தனது லெக் பிரேக் பவுலிங்கால் இந்த போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் நான்கு ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஒரு ஓவருக்கு சராசரியாக 2.75 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை திணற வைத்தார்.

ஜதவேத் சுப்ரமண்யம் ஹாங்காங் அணிக்காக ஆடிய அனுபவம் உள்ளவர். பின்னர் அங்கிருந்து தனது பூர்வீகமான சென்னைக்கு திரும்பி விட்டார். தற்போது டிஎன்பிஎல் தொடரில் ஆடி வருகிறார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெறும் என்ற முயற்சியில் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே முத்திரை பதித்து இருக்கிறார்.
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பாலசுப்பிரமணியம் சச்சின் 53 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தார். முகிலேஷ் 25 பந்துகளில் 31 ரன்களும், ராம் அரவிந்த் 11 பந்துகளில் 12 ரன்களும் எடுத்திருந்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ரன் சேர்த்து ஆட்டம் இழந்து இருந்தனர்.
இதை அடுத்து 142 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி சேஸிங் செய்யத் துவங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் சந்தோஷ்குமார் இரண்டு பந்துகளில் டக் அவுட் ஆனார். நாராயணன் ஜெகதீசன் நிதானமாக ஆடி 22 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார். அதன் பின் வந்த கேப்டன் பாபா அபாரஜித் 29 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். பிரதோஷ் ரஞ்சன் 32 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். அவர் நன்றாக பேட்டிங் ஆடி வந்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர்ட் அவுட் ஆனார்.
அது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இதனிடையே மிடில் ஓவர்களில் ஜதவேத் சுப்ரமண்யம் மிகவும் கட்டுக்கோப்பாக பந்து வீசத் துவங்கினார். அதனால் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் ரன் ரேட் வெகுவாக சரிந்தது. டேரில் ஃபெராரியோ இரண்டு ரன்களும், ஜிதேந்திரா குமார் 14 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து 20 ஓவர்களில் சேப்பாக் கில்லிஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோவை கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜதவேத் சுப்ரமண்யம் 4 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்த நிலையில், கேப்டன் ஷாருக் கான் 3 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி வைத்திருந்தார். மற்ற பவுலர்கள் அனைவரும் ஒரு ஓவருக்கு சராசரியாக ஆறு மற்றும் ஏழு ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்திருந்தனர்.