திண்டுக்கல்: டி என் பி எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் அஸ்வினுக்கு மோகன் பிரசாத் என்ற வீரர் ரன் அவுட் வார்னிங் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல்லில் நடைபெற்ற 28 வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன் அணியும், நெல்லை அணியும் பலபரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 19.4 ஓவரில் 136 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சிவம் சிங் 59 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். அதற்கு அடுத்தபடியாக அஸ்வின் மட்டும் 15 ரன்கள் சேர்த்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய நெல்லை அணி 17.5 ஓவர்கள் எல்லாம் ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அருண் கார்த்திக் 30 பந்துகளின் 45 ரன்களும், குருசாமி 39 பந்துகளில் 43-ரன்கள் எடுத்து நெல்லை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். எனினும் திண்டுக்கல் அணி 8 புள்ளிகள் பெற்றதால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
இந்த நிலையில் திண்டுக்கல் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஒரு ருசிகர சம்பவம் நடைபெற்றது. எப்போதும் அஸ்வின் தான் கிரிக்கெட்டில் உள்ள விதியைப் பயன்படுத்தி பந்துவீச்சாளர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியேறினால் அவரை ரன் அவுட் செய்து பரபரப்பை கிளப்புவார். பேட்ஸ்மேன்கள் எப்போதும் கிரீசை விட்டு வெளியே செல்லக்கூடாது என அவர் கூறுவார்.
இந்த நிலையில் அஸ்வின் நேற்று பேட்டிங் செய்யும்போது பந்துவீச்சாளர் முனையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது மோகன் பிரசாத் என்ற வீரர் பந்து வீசும் முன்பே அஸ்வின் கிரீசை விட்டு வெளியேற முயற்சி செய்தார். அப்போது மோகன் பிரசாத் திடீரென்று பந்தை நிறுத்திவிட்டு ரன் அவுட் செய்ய முயற்சி செய்தார்.
ஆனால் அதனை செய்யாமல் நடுவரிடம் சொல்லி அஸ்வினுக்கு வார்னிங் கொடுக்க சொன்னார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் விதியை மீறக்கூடாது என கூறும் அஸ்வினே விதியை மீற முயற்சி செய்ததாகவும், பவுலர் அவருக்கு விபூதி அடிக்க பார்த்ததாகவும் நகைச்சுவையாக கூறினர். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின் தாம் கீரிசை விட்டு வெளியேறவில்லை என்றும் பந்து போட்டு முடிக்கும் போது கிரீசை விட்டு வெளியேறலாம் என்றும் அதை தான் தாம் செய்ததாக அஸ்வின் சப்பை கட்டு கட்டி வருகிறார் .