திண்டுக்கல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் 35 பந்துகளில் 4 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 57 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.
டிஎன்பிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்த்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சேப்பாக் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் அபராஜித் 54 பந்துகளில் 72 ரன்களை சேர்த்தார்.

திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி, 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய சிவம் சிங் 49 பந்துகளில் 64 ரன்களையும், கேப்டன் அஸ்வின் 35 பந்துகளில் 4 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 57 ரன்களையும் விளாசினார்.
2வது விக்கெட்டுக்கு அஸ்வின் - சிவம் சிங் இருவரும் இணைந்து 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த டிஎன்பிஎல் தொடரில் அஸ்வின் பேட்ஸ்மேனாக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சதங்கள், அரைசதங்களை விளாசி இருந்தாலும், டி20 கிரிக்கெட்டிலும் அஸ்வின் ஜொலிப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் கூட ஸ்வீப், டவுன் தி டிராக் சிக்ஸ், லெக் சைட் சிக்ஸ் என்று மிரட்டலான ஷாட்களை அஸ்வின் வெளிப்படுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து குவாலிஃபையர் 2வது போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில் குவாலிஃபையர் முதல் போட்டியில் தோல்வியடைந்த திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்த்து அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கவுள்ளது.