சென்னை: டிஎன்பிஎல் தொடரின் 2வது குவாலிஃபையர் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்த்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய திருப்பூர் அணி தரப்பில் அமித் சாத்விக் - ரஹேஜா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
முதல் விக்கெட்டுக்கு 24 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் முதல் விக்கெட்டாக ரஹேஜாவை 8 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். இதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்த சீட்டுக்கட்டை போல் சரிய, 38 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திருப்பூர் அணி தவித்தது. பின்னர் கணேஷ் - பஃப்னா கூட்டணி சிறிது நேரம் போராடியது.

ஓரளவிற்கு தாக்குப்பிடித்த பஃப்னா 19 பந்துகளில் 26 ரன்களிலும், கணேஷ் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக திருப்பூர் அணி 19.4 ஓவர்களில் 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. திண்டுக்கல் அணி சார்பாக விக்னேஷ் 4 ஓவர்கள் வீசி 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், சுபோத் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் 109 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் அணியின் விமல் குமார் - அஸ்வின் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
கேப்டனாக தனது பொறுப்பை உணர்ந்து அஸ்வின் தொடக்க வீரராக களமிறங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஒரு பக்கம் விமல் குமார் நிதானமாக விளையாட, மறுபக்கம் அஸ்வின் பொளந்து கட்டினார். அதில் சாய் கிஷோர் வீசிய 5வது ஓவரில் 6,4,4 என்று 17 ரன்களையும், 8வது ஓவரில் 4,4,4 என்று 14 ரன்களை விளாசி அசத்தினார். இதன் மூலமாக 25 பந்துகளில் அரைசதம் அடித்த அஸ்வின், புவனேஷ்வரன் பவுலிங்கில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி வெற்றி இலக்கை எட்டினார்.
இதன் காரணமாக 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த அஸ்வின் 30 பந்தில் 3 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 69 ரன்களை விளாசினார். இதன் மூலமாக திண்டுக்கல் அணி டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் அஸ்வின் கேப்டனாக, பேட்ஸ்மேனாக, பவுலராக, ஃபீல்டராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.