சென்னை: டிஎன்பிஎல் தொடரில் பேட்டிங்கில் அசத்தி வரும் நட்சத்திர வீரர் அஸ்வின், அந்த பிராசஸ் எப்படி நடந்தது என்று விளக்கம் அளித்துள்ளார். ஐபிஎல் தொடரின் போதே புதிய ஷாட்களை பயிற்சி செய்ததாக கூறிய அஸ்வின், அதற்கான சோதனை களமாக டிஎன்பிஎல்-ஐ பயன்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கோவை - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன. இந்த டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணியின் கேப்டனாக, பேட்ஸ்மேனாக, பவுலராக, ஃபீல்டராக ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் மட்டும் 8 இன்னிங்ஸில் விளையாடியுள்ள அஸ்வின், இதுவரை 200 ரன்களை விளாசி இருக்கிறார்.

அதிலும் 166.67 ஸ்ட்ரைக் ரேட்டில் அஸ்வின் பேட்டிங் செய்ததும் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் சூர்யகுமார் யாதவை போல் ஸ்கொயர் திசைகளில் அஸ்வின் அதிகளவிலான பவுண்டரிகளை விளாசி வருகிறார். இதனால் 37 வயதில் கூட அஸ்வின் தனது பேட்டிங்கில் முன்னேற்றமடைய வேண்டும் என்று தீவிரமாக உழைத்து பயிற்சி மேற்கொண்டு வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அஸ்வின் பேசுகையில், கிரிக்கெட்டில் எதுவுமே உடனே நடந்துவிடாது. அது ஒரு பிராசஸ் என்று தான் சொல்ல வேண்டும். என்னை கேட்பது போல் நீங்கள் ஷாருக் கானையும் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவரால் எப்படி அவ்வளவு பெரிய ஷாட்களை பவருடன் அடிக்க முடிகிறது என்று ஆச்சரியமாக உள்ளது. ஆஃப் சைட் மற்றும் லெக் சைடில் கூட மிரட்டலாக சிக்சர்களை விளாசி தள்ளி வருகிறார்.
இதுபோன்ற ஷாட்களை நாங்கள் விளையாடுவதற்கு காரணம் பயிற்சி தான். பந்தின் ஆங்கில்களையும். ட்ரிக்கர் பாய்ண்டையும் பயன்படுத்தி ஷாட்களை விளாச முடிகிறது. கடைசி ஐபிஎல் தொடரிலேயே எனது ஆட்டத்தை கொஞ்சம் அடுத்த லெவலுக்கு கொண்டு வர முயற்சித்தேன். அப்போதே எனது சில ஷாட்கள் ஸ்கொயர் திசையில் இருந்திருக்கும்.
எனது கால்களை பயன்படுத்தி டவுன் தி கிரவுண்ட் ஷாட்களை அதிகம் விளையாடி இருக்கிறேன். அதனால் கூடுதலாக சில ஷாட்களை விளையாட நினைத்து, பயிற்சி மேற்கொண்டேன். எனக்குள் நானே கேள்வி எழுப்பி கொண்டு, பதிலாக தேடி வந்தேன். டிஎன்பிஎல் எனக்கு புதிய சோதனைகளை செய்து பார்க்கும் களமாக அமைந்தது. இதன் மூலமாக கிரிக்கெட் மீதான ஆர்வமும் எனக்குள் தீவிரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.