திண்டுக்கல்: டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணிக்கு எதிரான குவாலிஃபையர் முதல் போட்டியில் கோவை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 56 பந்துகளில் 9 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 123 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.
டிஎன்பிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் குவாலிஃபையர் முதல் போட்டியில் டிஃபெண்டிங் சாம்பியனான கோவை கிங்ஸ் அணியை எதிர்த்து திருப்பூர் தமிழன்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் அமித் சாத்விக் 42 பந்துகளில் 7 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 67 ரன்களையும், துஷார் ரஹேஜா 31 பந்துகளில் 2 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 55 ரன்களையும் விளாசினர். கடைசி நேரத்தில் முகமது அலி 23 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 45 ரன்களை குவித்தார். இதன்பின் 201 ரன்கள் என்ற அபார இலக்குடன் கோவை கிங்ஸ் அணிக்கு விக்னேஷ் - சுஜய் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
முதல் பந்திலேயே விக்னேஷ் போல்டாகி வெளியேற, பின்னர் நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் களம் புகுந்தார். முதல் சில ஓவர்கள் அமைதி காத்த சாய் சுதர்சன், 8 ஓவர்களை வரை நிதானம் காத்தார். இதனால் 8 ஓவர்கள் முடிவில் கோவை கிங்ஸ் அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 61 ரன்களாக இருந்தது. இதன்பின் பவுண்டரிகளை விளாசத் தொடங்கிய சாய் சுதர்சன் 32 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
அதன்பின் களத்தில் சாய் சுதர்சனின் ஆட்டத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிலும் 17வது ஓவரை வீசிய சாய் கிஷோர் பவுலிங்கில் ஹாட்ரிக் சிக்சரை விளாசி அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து நடராஜன் பந்திலும் சிக்சர் அடித்த சாய் சுதர்சன், 48 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இறுதியாக புவனேஷ்வரன் பவுலிங்கில் 6,6,4 என்று விளாசி 18.5 ஓவர்களில் 201 ரன்களை இலக்கை எட்டி கோவை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
அதிரடியாக ஆடிய அவர், 56 பந்துகளில் 9 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 123 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன் மூலமாக லைகா கோவை கிங்ஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக டிஎன்பிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. மேலும், இந்தப் போட்டிக்கு முன் சாய் சுதர்சன் ஒரு சிக்சரை கூட அடிக்கவில்லை. ஆனால் முக்கியமான போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.