கோவை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் பல பரீட்சை நடத்தியது. கோவையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் பாபா ஆப்ரஜித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க வீரர் அமித்ஷாத் விக் டக்அவுட் ஆகி வெளியேறினார். இதேபோன்று கே ராஜ்குமார் 14 ரன்களிலும் பிரதோஷ ரஞ்சன்பால் 38 ரன்களும் எடுக்க துஷாரா ரஞ்சன் அபாரமாக விளையாடி 27 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

இதனால் திருப்பூர் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. எனினும் மற்ற வீரர்கள் யாரும் அவருக்கு சரியாக துணை நிற்கவில்லை. துஷார் ரஞ்சன் பால் 43 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆட்டம் இழந்தது, போட்டியில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
சேப்பாக் சூப்பர் கில்லிஸ் பந்துவீச்சு தரப்பில் சிஎஸ்கே வீரர் விஜய் சங்கர் மற்றும் பாபா அப்ரஜித் அபிஷேக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களமிறங்கியது. இதில் ஆஷிக் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார்.
மோகித் ஹரிகரன் அபாரமாக விளையாடி 22 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். எனினும் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது பாபா அப்ரஜித் இன்னிங்ஸ் தான். திருப்பூர் பந்துவீச்சை சிதற அடித்த அவர் ஐந்து பௌண்டரி, 5 சிக்சர் என 48 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இறுதியில் விஜய் சங்கர் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று சிக்சர், இரண்டு பவுண்டரி அடங்கும்.
இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 16 ஓவர் முடிவில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இரண்டு புள்ளிகள் பெற்று ரன் ரேட் 2.22 என்ற அளவில் முதலிடத்தில் உள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி இரவு 7:15 மணிக்கு கோவையில் தொடங்குகிறது.