நத்தம்: திண்டுக்கல் அருகே டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் போது திடீரென மழைக்காலத்தில் வரும் பறக்கும் பூச்சிகளால் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கிரிக்கெட் மைதானத்தில் டிஎன்பிஎல் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது.
முதலில் சீகம் அணியினர் பேட்டிங் செய்து 156 ரன்கள் எடுத்திருந்தது.இதில் அதிகபட்சமாக ஆத்திக்குர் ரஹ்மான் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடங்கும். இதனை அடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆட்டத்தின் 9.2 ஆவது ஓவர் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மைதானத்தின் நான்கு புறமும் இருந்த மின்னொளி விளக்கைச் சுற்றிலும் மழைக்காலத்தில் வெளிவரும் இரவு பூச்சிகள் அதிகளவில் தோன்றியது. சிறிது நேரத்தில் மைதானத்திற்குள்ளும் அந்த பூச்சிகள் நுழைந்து விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் முதுகிலும் கழுத்திலும் சுற்ற துவங்கியது.
இதை அடுத்து சிறிது நேரத்தில் மைதானத்திலிருந்து வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்பினர். உடனே மைதான பராமரிப்பாளர்கள் தள்ளு வண்டியில் வேப்ப மர இலைகளை வைத்து புகை மூட்டத்தை ஏற்படுத்தி மைதானத்தைச் சுற்றிலும் மழைக்கால பூச்சிகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக கிரிக்கெட் போட்டி நிறுத்தப்பட்டது. ஹாலிவுட் திரைப்படமான தி மம்மி படத்தில் பேய் வருவதற்கு முன்பு இது போன்ற பூச்சிகள் ஊருக்குள் படையேடுக்கும். அதே போல் இந்த பூச்சிகள் வந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் போட்டி தொடங்கியது.
டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 14 ஓவரில் 114 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதில் 12.5 ஓவரில் சேப்பாக் அணி வீரர்கள் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை பெற்றனர். இதன் மூலம் சேப்பாக் அணி விளையாடிய 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.