கோவை; 2025 தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடர் நடந்து வரும் நிலையில், மூன்றாவது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி திருச்சி கிராண்ட் சோழா அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி துவக்க வீரர் சுஜய் 17 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளிக்க, கேப்டன் சுரேஷ்குமார் 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வசீம் அகமது அந்த அணியிலேயே அதிகபட்ச ரன்களை எடுத்தார். அவர் 32 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்திருந்தார். ஜாஃபர் ஜமால் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தார். சஞ்சய் யாதவ் 7 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். ராஜ்குமார் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்து இருந்தார்.

அதன் பிறகு கடைசி ஓவரில் முகிலேஷ் 5 ரன்கள் எடுத்த நிலையிலும், சரவண குமார் மற்றும் கௌஷிக் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். சோனு யாதவ் இவர்களை ஹாட்ரிக் எடுத்து வீழ்த்தினார். தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் இது ஆறாவது ஹாட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை அடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு 158 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் சோனு யாதவ் 3 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
அடுத்ததாக நெல்லை ராயல் கிங்ஸ் அணி சேசிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் அருண் கார்த்திக் மற்றும் சந்தோஷ் குமார் அபாரமாக ஆடினர். அவர்கள் முதல் விக்கெட்டுக்கு ஆறு ஓவர்களில் 66 ரன்களை சேர்த்திருந்தனர்.
அருண் கார்த்திக் 21 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்தார். அவர் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசி இருந்தார். சந்தோஷ்குமார் 35 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார். அவர் ஐந்து பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்து இருந்தார்.
அஜித்தேஷ் குருசாமி ஏழு ரன்களிலும், ரித்திக் ஈஸ்வரன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். நிர்மல் குமார் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வரிசையாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ஆறாம் வரிசையில் இறங்கிய ஹரிஷ் அபாரமாக ஆடினார். அவர் 22 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
கடைசி நேரத்தில் இறங்கிய சோனு யாதவ் 8 பந்துகளில் 10 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து 19.2 ஓவர்களில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.