டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் அணியும் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களம் இறங்கிய திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர் அஸ்வின் மற்றும் சிவம் சிங் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கேப்டன் அஸ்வின் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 163 ஸ்ட்ரைக் ரேட் உடன் அதிரடியாக விளையாடி வந்தார். ஆனால் அப்போதுதான் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது. சாய் கிஷோர் வீசிய பந்தில் அஸ்வின் எல்பிடபிள்யூ ஆனார்.

பந்து வெளியே பிட்ச் ஆகி தான் காலில் பட்டது. ஆனால் இதற்கு நடுவர் அவுட் என கூறியதால் அஸ்வின் அதிர்ச்சி அடைந்தார். உடனே பெண் நடுவர் கிருத்திகாவுடன் இது அவுட்டே கிடையாது! எப்படி அவுட் கொடுத்தீர்கள் என்று அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் கிருத்திகா இதனை கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.
அஸ்வின் அணியில் ஏற்கனவே இரண்டு டி ஆர் எஸ் வாய்ப்புகளை வீணடித்ததால் அவர் பெவிலியன் நோக்கி சென்றுவிட்டார். மறுமுனையில் சிவம் சிங் 30 ரன்களில் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் யாரும் நினைத்து நின்று ஆடவில்லை. அனைவரும் வந்த வேகத்தில் வெளியேறினார். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் 61 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்கோருடன் திண்டுக்கல் அணியினர் 93 ரன்களில் எல்லாம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகளையும், இசக்கிமுத்து நான்கு விக்கெட்டுகளையும், மதிவாணன் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். சர்வதேச வீரர் நடராஜன் 23 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இதனை அடுத்து 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று எளிய இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணியில் அமித் சாத்விக் 13 ரன்களில் வெளியேறினார்.
மறுபுறம் துஷாரா ராஜா 39 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். ராதாகிருஷ்ணன் 21 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க திருப்பூர் அணி 11.5 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 94 ரன்கள் எடுத்தது.