சென்னை: 2025 தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை சேதப்படுத்தியதாக மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. எனினும், அவர் மீது எந்த தவறும் இல்லை என தற்போது முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. அஸ்வின் மற்றும் அவரது அணியான திண்டுக்கல் டிராகன்ஸ் மீதான புகார் கைவிடப்பட்டு இருக்கிறது. அதே சமயம் புகார் சொன்ன மதுரை பாந்தர்ஸ் அணிக்கு நெருக்கடி அளிக்கப்பட்டு உள்ளது.
இரு நாட்களுக்கு முன்னர் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் மதுரை பாந்தர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதிய போட்டியில், மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயித்த 150 ரன்களை எட்டியது. அந்த அணி நிர்ணயித்த இலக்கை வெறும் 12.3 ஓவர்களில் எட்டி அஸ்வின் அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் முடிவில், அஸ்வின் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள் துண்டை வைத்து பந்தை துடைத்த போது, அதில் சில ரசாயனங்களை பயன்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி புகார் அளித்திருந்தார்.
டிஎன்பிஎல் தொடரின் விதிப்படி ஒரு போட்டி முடிந்த 24 மணி நேரத்திற்குள் புகார் அளிக்கலாம் என்ற நிலையில், போட்டி முடிந்த மறுநாள் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் தலைமை செயல் அதிகாரி பிரசன்னா கண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் ரசாயனம் கலந்த துண்டுகளைப் பயன்படுத்தி பந்தின் தன்மையை மாற்றினார்கள் எனவும், பந்தை மதுரை அணியின் பேட்ஸ்மேன்கள் சந்தித்தபோது அதில் உலோகம் போன்ற சத்தம் வந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தப் போட்டி நடைபெற்ற போது, மழையின் காரணமாக ஆடுகளம் ஈரமாக இருந்தது. அதனால் ஈரமாக இருந்த பந்தை துண்டுகளை வைத்து துடைப்பதற்கு இரண்டு அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதுதான் இந்தப் புகாருக்கான முக்கிய காரணமாகவும் இருந்தது. எனினும், தமிழ்நாடு பிரீமியர் லீக் அமைப்பு ஆதாரங்களை கேட்டு இருந்தது. "ஆதாரமில்லாமல் அஸ்வின் மீதோ, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மீதோ குற்றம் சுமத்த முடியாது. இவர்கள் அளித்த புகாரை நாங்கள் ஏற்கிறோம். அதே சமயம், அவர்கள் ரசாயனம் பயன்படுத்தியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டிற்கு ஆதாரத்தை வழங்க வேண்டும்" என கேட்டு இருந்தனர்.
இந்த நிலையில், அஸ்வின் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மீதான புகாருக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என கூறி இருக்கிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் நிர்வாகம். இது குறித்து தமிழ்நாடு பிரீமியர் லீக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பிரசன்னா கண்ணன் வெளியிட்டு இருக்கும் அறிக்கை:
"இரண்டு அணிகளுக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பின் சார்பில் தான் துண்டுகள் அளிக்கப்பட்டன. எங்கள் விளையாட்டு கட்டுப்பாட்டு குழு மற்றும் அம்பயர்கள், மேட்ச் ரெஃபரிகள் உள்ளிட்டவர்கள் பந்தை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருந்தனர். போட்டியின்போது எந்த சந்தேகமும் எழுப்பப்படவில்லை. மேலும், இந்த குற்றச்சாட்டிற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் சந்தேகத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், அந்த சம்பவம் நடந்து முடிந்ததற்குப் பிறகு சொல்லப்படும் ஒன்றாகவும் இருக்கிறது.
குற்றம் சுமத்தும் அணியிடம் நம்பத் தகுந்த, ஆய்வு செய்யக்கூடிய ஆதாரங்கள் இருந்தால், அவர்கள் அதை எங்கள் விசாரணை கமிஷன் முன்பு ஜூன் 17 மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு உரிய ஆதாரங்களாக வீடியோ, போட்டோ அல்லது அது தொடர்பான பேச்சுக்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு ஆதாரமற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகள் நடத்தை விதிகள் மற்றும் செயல்பாடு விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும்" என்று எச்சரித்துள்ளார்.
இதன்படி, தற்போது மதுரை பாந்தர்ஸ் அணி ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை என்றால், அந்த அணிக்கு ஏதேனும் வகையில் தண்டனை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அஸ்வின் மீது குற்றச்சாட்டு வைத்த மதுரை பாந்தர்ஸ் தற்போது ஆதாரத்தை அளிக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது.