சேலம்: 2025 தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினின் அணி செய்த ரன் அவுட் காமெடி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் செயல்பட்டு வரும் நிலையில், அந்த அணிதான் ரன் அவுட்டில் மூன்று முறை சொதப்பியது.
மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி ஓவரில் பந்தை எடுத்து மறுமுனையில் வீசினார். அது தவறிச் சென்றது. அப்போது பந்து வீச்சாளர் பந்தின் அருகே இல்லாததால், அது தவறிச் சென்றது. அதனால் பேட்ஸ்மேன்கள் இரண்டாவது ரன்னை ஓடினர்.

அதன் பின்னர் பந்தை எடுத்து மீண்டும் விக்கெட் கீப்பர் பாபா இந்திரஜித்திடம் வீசப்பட்டது. அவரும் பந்தை தவறவிட்டார். இதை பயன்படுத்தி மதுரை அணியின் பேட்ஸ்மேன்கள் மூன்றாவது ரன்னை ஓடினார்கள். இதைப் பார்த்த கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் நொந்துபோனார்.
ஐபிஎல் தொடருக்கு அடுத்து இந்தியாவில் நடைபெறும் சிறந்த டி20 கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக டிஎன்பிஎல் இருந்து வரும் நிலையில், அதில் இது போன்ற ஒரு நகைச்சுவையான சொதப்பல் ஏற்பட்டு இருக்கிறது.
இந்தப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அதிரடியின் உச்சத்துக்குச் சென்றது. வெறும் 12.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
ரவிச்சந்திரன் அஸ்வின் துவக்க வீரராக இறங்கி 29 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். சிவம் சிங் 41 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்தார். சுப்மன் சைனி ஏழு பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ஆடிய நிலையில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெறும் 12.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ஒரு ஓவருக்கு 12 ரன்கள் என்ற ரன் விகிதத்தில் ரன் சேர்த்திருந்தது.