சென்னை: 2025 தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் விளையாடி வரும் வருண் சக்கரவர்த்தி, கடைசி இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார்.
கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு பெரிய ஷாட்களை அடித்து அவர் திண்டுக்கல் டிராகன்ஸை வெற்றி பெற வைத்தார். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அவரை "ஆல் ரவுண்டர் ஆகிவிட்டார்" எனச் சுட்டிக்காட்டி பாராட்டி வருகின்றனர்.

நேற்று நடந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசியது. சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் நிதிஷ் ராஜகோபால் 47 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். ராஜேந்திரன் விவேக் 20 பந்துகளில் 35 ரன்களும், சன்னி சாந்து 14 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர்.
அஸ்வின் சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்களில் 33 ரன்களை வாரி இறைத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார். அடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் செய்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் துவக்க வீரராக இறங்கி 14 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.
சிவம் சிங் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். பாபா இந்திரஜித் மற்றும் மான் பப்னா சொதப்பினர். அடுத்து ஆர்.கே. ஜெயந்த் 15 பந்துகளில் 25 ரன்களும், ஹன்னி சைனி 28 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர். விமல் குமார் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.
ஒரு கட்டத்தில் கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் திண்டுக்கல் அணி இருந்தது. அப்போது வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்திரசேகர் களத்தில் இருந்தனர். இருவருமே தேர்ந்த பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பதற்றத்தில் இருந்தது. இந்த நிலையில், கடைசி ஓவரில் மூன்றாவது பந்தில் சந்திரசேகர் ஒரு ரன் எடுத்து வருண் சக்கரவர்த்திக்கு ஸ்ட்ரைக்கை அளித்தார்.
இன்னும் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், நான்காவது பந்தில் வருண் சக்கரவர்த்தி இரண்டு ரன்கள் எடுத்தார். அடுத்து ஒரு நோ-பால் வீசப்பட்டது. இந்த நிலையில், கடைசி இரண்டு பந்துகளில் 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது ஐந்தாவது பந்தில் வருண் சக்கரவர்த்தி ஒரு இமாலயன் சிக்ஸரை அடித்தார். ஸ்கோர் அப்போது சமன் ஆனது.
கடைசி பந்தில் வருண் சக்கரவர்த்தி ஒரு ஃபோர் அடித்தார். இதை அடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வருண் சக்கரவர்த்தி 5 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து தனது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதை அடுத்து வருண் சக்கரவர்த்தி ஆல்ரவுண்டராக மாறிவிட்டதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.