சென்னை: 2025 டிஎன்பிஎல் தொடருக்கான ஏலம் இன்று நடைபெற்றது. அதில் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்று வரும் வாஷிங்டன் சுந்தரை விட விஜய் சங்கர் மற்றும் முகமது ஆகியோருக்கு மூன்று மடங்கு ஏலத் தொகை சென்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வியப்படைந்து உள்ளனர்.
2025 தமிழ்நாடு பிரிமியர் லீக் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. ஒன்பதாவது சீசனான இந்த தொடருக்கு முன்னதாக ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 8 அணிகளை சேர்ந்த உரிமையாளர்களும் பங்கு பெற்றனர். ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்திற்கு முன்பே தக்க வைத்திருந்தன.

இந்த நிலையில் ஏலத்தில் முக்கிய வீரர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் சங்கர் இடம் பெற்றனர். அவர்கள் இருவருக்கும் அதிக தொகை ஏலத்தில் கேட்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்த்தது போலவே ஏலத்தில் முதல் வீரராக இடம் பெற்ற விஜய் சங்கரை சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 18 லட்சத்திற்கு வாங்கியது.
மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 16 லட்சம் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் நிலையில், அவரை விட அதிக சம்பளத்தை ஏலத்தின் மூலம் பெற்றார் விஜய் சங்கர். அடுத்து ஹரி நிஷாந்தை சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 12 லட்சத்திற்கு வாங்கியது. மற்றொரு தமிழ்நாடு ரஞ்சி வீரரான முகமதை சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 18.4 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது.
இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விஜய் சங்கர் அளவுக்கு ஏலத்தில் பெரும் தொகையை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி அவரை வெறும் 6 லட்சத்திற்கு வாங்கியது. இவர்களைத் தவிர பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட சில வீரர்களை இங்கே பார்க்கலாம்:
பெரியசாமியை திண்டுக்கல் டிராகன்ஸ் 9.8 லட்சத்திற்கு வாங்கியது.
கௌஷிக் திருச்சி கிராண்ட் சோழாஸ் 8 லட்சத்திற்கு வாங்கியது.
ஸ்வப்னில் சிங் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியால் 10.8 லட்சத்திற்கு வாங்கப்பட்டார்.
சரவண குமாரை திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 8.4 லட்சத்திற்கு வாங்கியது.
சிலம்பரசனை திருப்பூர் தமிழன்ஸ் அணி 9 லட்சத்திற்கு வாங்கியது.