சென்னை: திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவையடுத்து, அவருக்கு அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தும் வகையில் டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் நடக்கிறது. இன்று முதல் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடப்பதாக இருந்தன.
இந்த நிலையில், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி இன்று மாலை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இன்றும், நாளையும் நடக்கவிருந்த பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று நடக்கவிருந்த முதல் குவாலிபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகளும், நாளை நடக்கவிருந்த எலிமினேட்டர் போட்டியில் கோவை மற்றும் காரைக்குடி அணிகள் மோதவிருந்தன.
இந்தப் போட்டிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.