குயானா: இந்திய அணியின் விரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடதுகை பேட்ஸ்மேன்களை வைத்து உருவாக்கிய திட்டமே வெற்றிக்கு காரணம் என்று கேப்டன் ரோவ்மன் பவல் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் சேர்த்திருந்தது.

கடைசி 5 ஓவரில் 26 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவையாக இருந்த நிலையில், சாஹல் வீசிய 16வது ஓவரில் ஒரு ரன் அவுட் உட்பட இந்திய அணி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி சரியான கம்பேக்கை கொடுத்தது. சாஹல் சிறப்பாக பந்துவீசியும் மீண்டும் அவரை பயன்படுத்தாமல், ஹர்திக் பாண்டியா வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது இந்திய அணி தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அகீல் ஹொசைன் - அல்ஜாரி ஜோசப் கூட்டணி 9வது விக்கெட்டுக்கு 26 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2016ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணியை தொடர்ச்சியாக 2 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தி அசத்தியுள்ளது.
இந்த வெற்றியால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்று முன்னிலையில் உள்ளது. அதேபோல் டி20 தொடரை கைப்பற்ற மீதமிருக்கும் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிக் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் கூறுகையில், 2016ஆம் ஆண்டுக்கு பின் நாங்கள் டி20 தொடரில் வெற்றிபெறவில்லை. அதனால் இந்த டி20 தொடரை வெல்வதற்கான சிறந்த இடத்தில் இருக்கிறோம்.
எங்கள் பந்துவீச்சாளர்களை ஒரு ஓவர் ஸ்பெல்லை மட்டும் வீசுவதற்காகவே திட்டமிட்டு அழைத்தோம். அதற்கு கடுமையான வெயில் தான் காரணம். அதேபோல் விரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள, நல்ல இடதுகை பேட்ஸ்மேன்கள் அவசியம். சாஹல், பிஷ்னாய் உள்ளிட்டோரை கட்டுப்படுத்த எங்கள் அணியின் இடதுகை பேட்ஸ்மேன்களான பூரன் மற்றும் ஹெட்மயர் இருவரும் கவுன்ட்டர் செய்வதே சரி என்று முடிவு செய்திருந்தோம். அதனை களத்தில் செயல்படுத்தினோம் என்று தெரிவித்தார்.