
பிளே-ஆப்பில் ஆர்சிபி
ஐபிஎல்லில் பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேறியுள்ளது ஆர்சிபி அணி. நாளை நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதவுள்ளது. கடந்த சில போட்டிகளில் தோல்வியடைந்தாலும், தொடரின் ஆரம்பத்தில் இருந்து சிறப்பான வெற்றிகளை தந்துள்ளது ஆர்சிபி.

கோலியின் 32வது பிறந்தநாள்
இந்த வெற்றிகளுக்கு ஆர்சிபியின் கேப்டன் விராட் கோலியும் காரணம். அவர் அணியை சிறப்பாக வழிநடத்தியதாலேயே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய 32வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார் விராட் கோலி. இதையொட்டி ஆர்சிபி மற்றும் ஐபிஎல் உள்ளிட்டவை 12 மணியளவிலேயே தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.
ஆர்சிபி பாராட்டு
தங்களுடைய அணியில் கடந்த 12 ஆண்டுகளாக உள்ள விராட் கோலி, அணிக்காக ரத்தம், வியர்வை, கண்ணீர் உள்ளிட்டவற்றை கொடுத்துள்ளதாக ஆர்சிபி பாராட்டு தெரிவித்துள்ளது. தங்களின் தலைவன் மற்றும் ஜாம்பவான் கிங் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் ஆர்சிபி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஐபிஎல் பாராட்டு
இதனிடையே ஐபிஎல் அணியும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்துள்ள விராட் கோலி என்று பாராட்டு தெரிவித்துள்ள ஐபிஎல், இந்த சீசனில் சிஎஸ்கேவிற்கு எதிராக அவர் எடுத்த 90 ரன்களுக்கான வீடியோவையும் பகிர்ந்துள்ளது.

கோலியின் ஐபிஎல் சாதனை
இதுவரை ஐபிஎல்லில் 191 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 5872 ரன்களை குவித்துள்ளார். தற்போதைய ஐபிஎல் 2020 சீசனிலும் லீக் போட்டிகளில் மட்டுமே 460 ரன்களை குவித்ததன்மூலம் தன்னுடைய அணியை பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேற்றியுள்ளார். கடந்த 2016க்கு பிறகு அந்த அணி தற்போது பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேறியுள்ளது.


Click it and Unblock the Notifications