டெல்லி: விராட் கோஹ்லியை அதற்குள் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடக் கூடாது என்று முன்னாள் இலங்கை பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை பலரும் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து முன்னாள் இலங்கை பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில்,
கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் ஒரு சகாப்தம். அப்படி இருக்கையில் அதற்குள் கோஹ்லியை சச்சினுடன் ஒப்பிடக் கூடாது. கோஹ்லி ஒரு 15 ஆண்டுகள் விளையாடட்டும். அதன் பிறகு அவரை ஒப்பிடலாம்.

கோஹ்லி சிறப்பான பேட்ஸ்மேன். ஃபுல்பார்மில் இருக்கும் கோஹ்லிக்கு பந்து வீச நான் பலமுறை யோசிக்க வேண்டும். இம்முறை ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி கோப்பையை வென்றது. (முரளிதரன் ஹைதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளர்)
நாங்கள் ஒரு அணியாக வென்றுள்ளோம். பல தருணங்களில் எங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்தது. வார்னர் ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டார் என்றார்.