கோலி, தோனி-யை முந்திய சுப்மன் கில்.. சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 இந்திய பிரபலங்கள்?
மும்பை: இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வீரர் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் இருப்பார். கவாஸ்கர் கபில்தேவ்,சச்சின், தோனி, கோலி ஆகியோர் வரிசையில் தற்போது இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் இடம் பிடித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆண்டர்சன்- டெண்டுல்கர் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் கேப்டனாக 754 ரன்கள் குவித்து இருக்கிறார். இதன் மூலம் தொடர் நாயகன் விருதையும் கில் பெற்றார். இப்படி கில், பல சாதனைகளை படைத்திருந்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக மாறி இருக்கிறார்.

அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் ஆகஸ்ட் மாதம் மிகவும் பிரபலமாக இருந்த இந்தியர்கள் குறித்து ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. இதில் விளையாட்டு வீரர்களை பொறுத்தவரையில் கில் முதலிடத்தில் இருக்கின்றார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான விராட் கோலி இரண்டாவது இடத்திலும், தோனி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக சமூக வலைத்தளத்தின் பிரபலமாக உள்ள இந்தியர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். இதேபோன்று இரண்டாவது இடத்தில் தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆர் உள்ளார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இடம் பிடித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களான கில் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்திலும், விராட் கோலி ஏழாவது இடத்திலும், தோனி ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். இவர்களை தவிர இந்த பட்டியலில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலை குறிப்பிட்டு இனி கில் தான் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் என்று அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் விராட் கோலி, தோனி ஆகியோர் ஆகஸ்ட் மாதத்தில் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்ததால் மட்டுமே கில் இவர்களை முந்தியதாக கோலி தரப்பு ரசிகர்களும் பதிலடி தந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications