இறுதிப் போட்டி
இதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளும் சம பலத்துடன் இருக்கிறது. சூப்பர் 12 சுற்றில் இரு அணிகளுமே 5இல் 4 போட்டிகளில் வென்று, ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தது. புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்திருந்த இரண்டு அணிகளும் அரையிறுதியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எத்திரணியைத் தோற்கடித்தது. இந்த நிலை இறுதிப் போட்டியில் நிச்சயம் மாறும்.
டாஸ் முக்கியம்
இன்று நடைபெறும் இறுதிப் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் மாலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. டாஸ் வென்ற பிறகு. சேஸிங் செய்வதே ஆரோன் பின்ச் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரின் முதல் சாய்ஸாக இருக்கும். ஏனென்றால், துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடைசியாக விளையாடிய 17 ஆட்டங்களில், 16 போட்டிகளில் 2ஆவதாக பேட்டிங் செய்த அணிகளே வென்றுள்ளது.
என்ன காரணம்
அதேபோல டி20 உலகக் கோப்பையிலும் பின்ச் மற்றும் வில்லியம்சன் என இருவரும் டாஸை வெல்லும் போது சேஸ் செய்யவே விரும்புகின்றனர். இரண்டாவதாகப் பேட் செய்யும் போது, எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் என தெளிவாகத் தெரிந்துவிடும். அதற்கேற்ப ஆட்டத்தைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். எனவே, இந்த போட்டியிலும் டாஸ் வெல்லும் கேப்டன் நிச்சியம் பவுலிங்கை தேர்ந்தெடுக்கவே வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
புதிய பிட்ச்
ஆனால், அதேநேரம் இறுதிப் போட்டிக்குப் புதிதாக அமைக்கப்பட்ட பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்யும் அணி 180 + ரன்களை எடுத்தால், அதை டிபன்ட் செய்யும் வாய்ப்புகள் உள்ளது. அரையிறுதியில் 2ஆவதாகப் பேட் செய்த ஆஸ்திரேலியாவை 12 ஓவர்களில் 96/5 என்ற நிலைக்குப் பாகிஸ்தான் தள்ளியது. இருப்பினும், கடைசி நேரத்தில் பாகிஸ்தான் சொதப்பியதாலேயே ஆட்டம் பாகிஸ்தான் கையைவிட்டுச் சென்றது.
மெஜிக் நம்பர்
கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 192 ரன்கள் குவித்தது. அதன் பிறகு கேகேஆர் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும், அவர்களைச் சென்னை அணியால் கட்டுப்படுத்த முடிந்தது. எனவே, டாஸ் வென்றாலே போட்டியை வென்றுவிட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. இங்கு 180 தான் மெஜிக் நம்பர். முதலில் பேட் செய்யும் அதைத் தாண்டிவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
ஸ்பின்னர்கள்
துபாய் மைதானத்தின் பவுன்டரிக்கள் பெரியது. எனவே இந்த போட்டியில் ஸ்பின் பந்துவீச்சாளர்களின் பங்கு முக்கியமானது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டும் சில தரமான சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளது. நியூசிலாந்து அணியில் லியாம் லிவிங்ஸ்டோன், இஷ் சோதி மற்றும் மிட்செல் சான்ட்னர் உள்ளனர், அதேபோல ஆஸ்திரேலியாவில் ஆடம் ஜம்பா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் உள்ளனர். இவர்களை எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதும் வெற்றி தோல்வியை முடிவு செய்யும்.