பர்மிங்காம்: ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசிய டிராவிஸ் ஹெட்டை ஆஃப் ஸ்பின்னரான மொயின் அலி வீழ்த்தி அசத்தியுள்ளார். இதையடுத்து மீண்டும் இந்திய அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய நாளின் முதல் செஷனிலேயே ஆஸி. அணியின் வார்னர், லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த நிலையில் களம் புகுந்த டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெளிப்படுத்திய பேட்டிங் ஃபார்மை மீண்டும் ரசிகர்களுக்கு காட்டினார்.

அதிரடியாக ஆடிய அவர் 60 பந்துகளில் அரைசதம் விளாசி அபாயகரமான வீரராக காணப்பட்டார். களத்தில் இரு இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்ததால், உடனடியாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஆஃப் ஸ்பின்னரான மொயின் அலியை அட்டாக்கில் கொண்டு வந்தார். இந்த நிலையில் மொயின் அலியை அட்டாக் செய்ய நினைத்து டிராவிஸ் ஹெட் டவுன் தி டிராக் இறங்கி வந்து அடிக்க, அது கிராலே கைகளில் கேட்ச்சானது. இதனால் இங்கிலாந்து அணிக்கு சாதகம் ஏற்பட்டது.
இதனை கண்ட இந்திய ரசிகர்கள் இந்திய அணியை மீண்டும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இடதுகை பேட்ஸ்மேன்களை வீழ்த்த இங்கிலாந்து அணியே ஆஃப் ஸ்பின்னரான மொயின் அலியை ஓய்வில் இருந்து மீண்டும் அழைத்து வந்துள்ள நிலையில், உலகின் நம்பர் 1 பவுலரும் ஸ்பின்னருமான ரவிச்சந்திரன் அஸ்வினை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வினை எடுக்காத ரோகித் சர்மாவையும் ராகுல் டிராவிட்டையும் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.