சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ட்ராவிஸ் ஹெட் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய அணி ரசிகர்களுக்கு ஒருவித அழுத்தத்தை கொடுத்து இருக்கிறது என்றே சொல்லலாம். இந்திய ரசிகர்கள் ட்ராவிஸ் ஹெட்-டை இந்திய அணியின் வில்லனாகவே பார்த்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியில் ஏன் இந்த மாற்றம்? தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் இருக்கிறார். அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தான் சமீபத்தில் இந்திய அணியை 3 - 1 என வீழ்த்தி பார்டர் - கவாஸ்கர் டிராபி கோப்பையை வென்று இருந்தது.

கம்மின்ஸ்-க்கு குழந்தை பிறந்து இருப்பதால் அவர் சில வாரங்களுக்கு விடுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜனவரி 29 அன்று முதல் டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 6 அன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளன.
பாட் கம்மின்ஸ் இல்லாததால் இந்த டெஸ்ட் தொடருக்கு ஸ்டீவ் ஸ்மித் அணியின் கேப்டனாக இருப்பார் என ஆஸ்திரேலிய அணி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிக் பாஷ் லீக் தொடரில் ஸ்மித் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. அதனால், அவரால் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாமல் போகலாம் என கூறப்படுகிறது.
ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என்றால் ட்ராவிஸ் ஹெட் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்து வருகிறார் ட்ராவிஸ் ஹெட். சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்ற அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
கடந்த 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு ட்ராவிஸ் ஹெட் முக்கிய காரணமாக இருந்தார். அந்த இரண்டு இறுதிப் போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து இருந்தார். அவருக்கு கேப்டனாகவும் செயல்பட வாய்ப்பு கிடைத்தால் எப்படி ஆடுவாரோ? என இந்திய ரசிகர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.