லக்னோ: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி துவக்க பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட், 2025 ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியான நிலையில், அவர் மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட இருக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது 13வது லீக் போட்டியில் விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, டிராவிஸ் ஹெட் கொரோனா பாதிப்பால் 2025 ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியானது. இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தால் ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்ட போது, டிராவிஸ் ஹெட் இந்தியாவிலிருந்து வெளியேறினார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டபோது அவரால் பங்கேற்க முடியாத சூழல் இருந்தது.

ஏற்கனவே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், டிராவிஸ் ஹெட் அந்த அணிக்காக விளையாடுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை வைத்து, அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாகவே அனைவரும் கருதினர்.
இந்த நிலையில், அவர் திடீரென ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்கிளின் அறிவித்திருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. எனினும், அந்த அணி கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க முடியும். அதன் மூலம் பிளே ஆஃப் சுற்றில் கூடுதல் வாய்ப்பை பெற முடியும். இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மீண்டும் வந்து இருக்கும் டிராவிஸ் ஹெட் சிக்கலை ஏற்படுத்துவாரா? என்று ஆர்வம் ஏற்பட்டுள்ளது.