லாகூர் : சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில் அந்த தொடருக்கு முன்பு ஒரு பயிற்சி களமாக பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடர்காக லாகூர் மைதானம் புனரமைக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்த அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை எடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர் வில் யங் நான்கு ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 25 ரன்களிலும் வெளியேறினார்.

இதை அடுத்து அந்த அணியின் அனுபவ வீரர் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 89 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் டாரல் மிட்செல் 84 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் அந்த அணியின் கீழ் வரிசை வீரரான கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி ஏழு சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் என 74 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார்.
இறுதியில் மைக்கேல் பிரேஸ்வெல் 32 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஷாகின் அப்ரிடி 88 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை அடுத்து 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரராக விளையாடிய பாபர் அசாம் பத்து ரன்களிலும், கம்ரான் குலாம் 18 ரன்களிலும், கேப்டன் ரிஸ்வான் மூன்று ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
எனினும் தொடக்க வீரராக களமிறங்கிய பக்கர் சமான் அதிரடியாக ஆடி நான்கு சிக்சர், 7 பவுண்டரி என 69 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் சல்மான் 40 ரன்களும், தயாப் தஹிர் 30 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 47.5 ஓவரில் 252 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது. நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் மார்க் ஹென்றி மூன்று விக்கெட்டுகளும், மிட்செல் சாட்னர் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்கள். இந்த போட்டியின் போது பில்டிங் செய்து கொண்டிருந்த சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இந்த போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார்.