சேலம்: மதுரை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த திருச்சி அணி, டிஎன்பிஎல் தொடரின் முதல் அணியாக வெளியேறி அதிர்ச்சியளித்துள்ளது.
டிஎன்பிஎல் தொடரின் 21வது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்த்து பால்ஸி திருச்சி அணி களமிறங்கியது. முதல் வெற்றியை பெறும் நோக்கில் திருச்சி அணியும், ஹாட்ரிக் வெற்றியை பெறும் நோக்கில் மதுரை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மதுரை பந்துவீச்சாளர்களுக்கு எந்தவித பதிலடியும் கொடுக்காமல் திருச்சி அணி சுருண்டது.

மொத்தமாக 18.5 ஓவர்களில் திருச்சி அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக அந்த அணியின் மணி பாரதி 48 ரன்களும், பெராரியோ 21 ரன்களும், ரோகின்ஸ் 18 ரன்கள் எடுத்தனர். அந்த அணியின் 7 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தை ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். மதுரை அணி தரப்பில் சரவணன் 3 விக்கெட்டுகளையும், அஜய் கிருஷ்ணா மற்றும் குர்ஜப்னீத் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் எளிய இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அசத்தியது. அந்த அணியின் தொடக்க வீரர் சுரேஷ் 32 ரன்களும்,. ஸ்வப்னில் சிங் 25 ரன்களும் விளாசினர். இதன்மூலம் 17 ஓவர்களிலேயே 108 ரன்கள் எடுத்து மதுரை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
லீக் சுற்றில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த மதுரை, மீண்டு வந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்னொரு பக்கம் 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளிலும் தோல்வியடைந்த திருச்சி அணி, டிஎன்பிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது.