TNPL 2019: சதமடித்து சாதித்த முரளி விஜய்..! தூத்துக்குடியை துவம்சம் செய்த திருச்சி வாரியர்ஸ்
திண்டுக்கல்: டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் முரளி விஜய் சதத்தால், தூத்துக்குடியை வீழ்த்தி திருச்சி அணி முதல் வெற்றியை பெற்றது.
8 அணிகள் இடையிலான டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் நத்தத்தில் நடந்த 24வது லீக் ஆட்டம் நடைபெற்றது. முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்சை எதிர்கொண்டது.
டாஸ் ஜெயித்த திருச்சி வாரியர்ஸ் முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக் காரர்களாக முரளி விஜய்யும், முகுந்தும் களம் புகுந்தனர். விஜய் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடுவதில் கவனம் செலுத்தினார். முகுந்த் 6 ரன்னில் அதிசய ராஜ் டேவிட்சனின் பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த ஆதித்யா பாரோவும் டக் அவுட்டானார்.

நிதானம் விஜய்
விஜய்யும், ஆதித்யா கணேசும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். வெங்கேடஷ், சரவணன் ஓவர்களை பதம் பார்த்த, சிக்சர்களை பறக்க விட்ட விஜய் 95 ரன்னை அடைந்ததும் நிதானம் காட்டினார்.

தொடரின் 3வது சதம்
முந்தைய ஆட்டத்தில் 99 ரன்னில் ஆட்டமிழந்ததை நினைவில் வந்தது போல, ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து சதத்தை எட்டினார். நடப்பு தொடரில் அடிக்கப்பட்ட 3வது சதம் இதுவாகும்.

178 ரன்கள் இலக்கு
இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய தூத்துக்குடி அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுக்க முடிந்தது.

வென்றது திருச்சி
அதிகபட்சமாக அக்ஷய் சீனிவாசன் 63 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் வெற்றி பெற்றது. முதல் 5 ஆட்டங்களில் வரிசையாக தோற்று இருந்த திருச்சிக்கு கிடைத்த முதல் வெற்றி இது. அதே சமயம் 4வது தோல்வியை தழுவிய தூத்துக்குடியின் அடுத்த சுற்று ஏறக்குறைய முடிந்தது.


Click it and Unblock the Notifications