
டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் இரண்டு வாரங்களில் நடந்த ஆட்டங்களை, 31.2 கோடி பேர் டிவியில் பார்த்துள்ளனர்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 25 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்கியுள்ளதால், இந்த ஐபிஎல் சீசன் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிவி மற்றும் பிற வழிகளில் ஐபிஎல் போட்டிகளை பார்ப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது இதையே காட்டுகிறது. கடந்த சீசனில் முதல் இரண்டு வாரங்களில் 29.5 கோடி பேர் டிவியில் ஐபிஎல் போட்டிகளை பார்த்துள்ளனர். இந்த ஆண்டு முதல் இரண்டு வாரங்களில் நடந்த 17 போட்டிகளை 30.3 கோடி பேர் தங்களுடைய வீட்டில் உள்ள டிவியிலும், 9.5 கோடி பேர் ரெஸ்டாரென்ட், பார் போன்ற இடங்களில் டிவியிலும் பார்த்துள்ளனர்.
கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது, இது 27 சதவீத வளர்ச்சியாகும். இந்த ஆண்டில் 70 கோடி பேர் ஐபிஎல் போட்டிகளை டிவியில் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது போட்டிகள் மிகவும் விறுவிறுப்பு அடைந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை கண்டிப்பாக அதிக அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது. மேலும் ஹாட்ஸ்டார் மூலமாகவும் மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப்பில் பார்க்க முடியும். ஹாட்ஸ்டார் மூலம் அதிகமானோரை ஈர்க்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் திட்டமிட்டுள்ளது.
கடந்தாண்டைவிட டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் டிவியில் ஐபிஎல் போட்டிகளை பார்ப்போர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் 44 சதவீதம் உயர்ந்துள்ளது. ஹைதராபாத்தில் 33 சதவீதமும், பெங்களூருவில் 29 சதவீதமும் உயர்ந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதரபாத் அணிகள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றன. மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி மீதும் புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், தென் இந்தியாவில் டிவியில் ஐபிஎல் பார்ப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.