சென்னை: 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் உருவாக்கப்பட்ட போது லலித் மோடி கிரிக்கெட் மற்றும் சினிமாவை ஒன்றிணைத்தார் என்று சொல்லலாம். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்களாக ஷாருக் கான், பிரீத்தி ஜிந்தா உள்ளிட்டோரை அழைத்து வந்தார். அதேபோல் பாலிவுட் பிரபலங்களை ஒவ்வொரு அணிக்கும் விளம்பரத் தூதர்களாக கொண்டு வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் என்று சொல்லலாம்.
அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கும் சில பாலிவுட் பிரபலங்களை ஒப்பந்தம் செய்யலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால் சென்னை நடக்கும் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் வந்துவிடுவார்கள் என்றாலும், விளம்பரத் தூதர் ஒருவர் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று ஆலோசிக்கப்பட்டது. இதன்பின் நடிகர் விஜய் மற்றும் நயன்தாரா இருவரும் விளம்பரத் தூதர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

ஆனால் கடைசி நேரத்தில் நயன்தாரா விலகி கொள்ள, விஜய் மட்டுமே சிஎஸ்கே அணியின் விளம்பரத் தூதராக செயல்பட்டார். சிஎஸ்கே அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு சேப்பாக்கம் மைதானத்தில் விஜய் கொண்டாட்டமாக கிரிக்கெட் போட்டிகளை கண்டிருக்கிறார். உள்ளூர் வீரர்கள் பெரியளவில் இல்லாத சிஎஸ்கே அணியில், தோனியுடன் விஜய் நின்ற காட்சிகள் இன்றும் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.
ஆர்சிபி அணிக்காக தீபிகா படுகோனே, புனீத் ராஜ்குமார், உபேந்திரா, ரம்யா, சிவராஜ் குமார், கணேஷ் என்று 6 பேர் விளம்பரத் தூதர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அவர்கள் 6 பேர் சேர்ந்து செய்த பணியை ஒரே ஆளாக விஜய் சிஎஸ்கே அணிக்கு செய்து கொடுத்தார். அப்போது சிஎஸ்கே அணி வீரர்கள் அனைவரையும் மைதானத்தில் இறங்கி விஜய் சந்தித்திருக்கிறார்.

ஒரு போட்டியின் போது அவரின் மகன் முதுகில் ஏறி அமர்ந்திருக்க, சக வீரர்களுடன் விஜய் ஜாலியாக உரையாடிய காட்சிகள் அரங்கேறின. அங்கு தோனியுடன் தொடங்கிய நட்பு, இன்று வரை தொடர்ந்து வருகிறது. அண்மையில் சென்னை விளம்பரப் படப்பிடிப்பிற்காக வந்த தோனி, அருகில் பீஸ்ட் படப்பிடிப்பில் இருந்த் விஜயை நேரில் சந்தித்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்.
இதன் காரணமாக தல மற்றும் தளபதி என்று சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியது. தற்போது அரசியல் களமிறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்துள்ளார். பல்வேறு தரப்பினரும் நடிகர் விஜய்-க்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இதனிடையே சிஎஸ்கே ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியுடன் விஜய் இருக்கும் புகைப்படங்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.