ரியோடிஜெனிரோ: டுவிட்டர் பயன்படுத்துவோரின் பயன்பாட்டை வைத்து, உருவாக்கப்பட்ட கனவு அணியில் ரோனால்டோ, ரூனே, நெய்மார் ஆகியோர் முக்கிய வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான, பிஃபா உலககோப்பை கால்பந்தாட்ட போட்டி இன்னும் ஏழு நாட்களில் பிரேசில் நாட்டில் தொடங்க உள்ளது. இதனால் உலகமெங்கும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் கால்பந்தாட்ட ஜுரத்தில் சிக்கியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் அவர்கள் டுவிட்டர் வலைத்தளத்தில் எந்தெந்த வீரரின் பெயர்களை அதிகம் பயன்படுத்தினர் என்பதை வைத்து கனவு அணியை டுவிட்டர் உருவாக்கி அதை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி ரொனால்டோ, ரூனே, நெய்மார் ஆகிய வீரர்கள் பெயர் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக டுவிட்டர் கூறியுள்ளது. கனவு அணியின் கோல் கீப்பராக ஸ்பெயின் நாட்டின், லெர்காசில்லாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியின் மேசுட் ஓசில், ஸ்பெயின் நாட்டின் ஜுவான் மாடா, ஆண்ட்ரேஸ், செர்கியோ ராமோஸ், மெக்சிகோவின் மிகுவேல் லேயுன், பிரேசிலின் டேவிட் லூயிஸ், டேனியல் அல்வேஸ் ஆகியோர் அந்த கனவு அணியின் வீரர்களாக தேர்வாகியுள்ளனர்.
உலககோப்பையில் மோத உள்ள 32 அணிகளில், 30 அணிகளுக்கென்று பிரத்யேக டுவிட்டர் அக்கவுண்ட் உள்ளது. வீரர்கள் 300க்கும் மேற்பட்டோரும் தங்களது பெயரில் டுவிட்டர் அக்கவுண்ட் வைத்துள்ளனர்.