
டெல்லி:
தற்போது கிரிக்கெட் உலகின் இளம் புயலாக உள்ள ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானுக்கு சந்திராஷ்டமம் போல் உள்ளது. டுவிட்டரில் அவர் கூறிய ஒரு வார்த்தையை வைத்து அவரை பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது மிகவும் பேசப்படும் அணியாக உள்ளது. பல இளம் வீரர்களைக் கொண்டுள்ள அந்த அணி மிரட்டலாக ஆடி வருகிறது. குறிப்பாக அந்த அணியின் 19 வயதாகும் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானின் பந்துவீச்சு மெர்சலாக உள்ளது. சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி அசத்தினார்.

இந்த நிலையில், வங்கதேசம் அணிக்கு எதிராக மூன்று டி-20 போட்டித் தொடர் டேராடூனில் நடந்தது. இதில் ஆப்கானிஸ்தான் 3-0 என்ற கணக்கில் தொடரை ஒயிட்வாஷ் செய்தது. இதற்கு ரஷீத் கானின் பந்துவீச்சு முக்கிய காரணமாகும்.
தற்போது கிரிக்கெட் வர்ணனையில் முன்னணியில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஹர்ஷா போக்லே, ரஷீத் கானைப் பாராட்டி டுவிட்டரில் ஒரு செய்தி போட்டார். அதற்கு பதிலளித்த ரஷீத் கான், தேங்க் யூ புரோ என்று குறிப்பிட்டார்.
இங்குதான் வினையே ஆரம்பித்தது. 56 வயதாகும் ஒரு சீனியர் வர்ணனையாளரான போக்லேவை, 19 வயதாகும் ரஷீத் கான் எப்படி புரோ என்று கூறலாம் என்று டுவிட்டரில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
வளர்ந்து வரும் இளம் வீரர், ஒரு சீனியருக்கு, வயதில் சீனியருக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று மா. நன்னன் ஸ்டைலில் பலரும் பாடம் எடுக்கத் துவங்கியுள்ளனர். நான் இனிமேல் டுவிட்டர் பக்கமே போக மாட்டேன். ஏன் போனே எடுக்க மாட்டேன் என்று ரஷீத் கான் கூறும் அளவுக்கு அவரை டுவிட்ரில் பலரும் கழுவி கழுவி ஊத்தி வருகின்றனர்.