சென்னை : சர்வதேச அண்டர் 19 கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 வயதான இந்திய வீரர் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்திருக்கிறார். மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 4 நாட்கள் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது.
இதில் ஒரு நாள் தொடரை இந்தியா வென்ற நிலையில், டெஸ்ட் தொடர் சென்னையில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் கிங்ஸில் 53 ரன்கள் எடுக்க மற்றொரு தொடக்க வீரர் ஸ்டீவன் ஹோகன் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஆலிவர் 29 ரன்களிலும் கேப்டன் சைமன் 20 ரன்களும் எடுக்க நடுவரிசையில் கிறிஸ்டின் ஹாவ் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இறுதியில் ஏய்டன் கோணர் என்ற வீரர் அபாரமாக விளையாடி 61 ரன்கள் சேர்த்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி 71.4 ஓவர்களில் 293 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் சமத் நாகராஜ் மற்றும் முகமது ஈனான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனை அடுத்து இந்திய அண்டர் 19 அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இதில் 13 வயது வீரரான வைபவ் சூரியன்வாசி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
இவர் 47 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். மற்றொரு வீரரான விகான் மல்ஹோத்ரா 37 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அண்டர் 19 அணி 14 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் குவித்து இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியை விட தற்போது இந்திய அணி 190 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் எஞ்சி இருப்பதால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இந்த சூழலில் சர்வதேச அளவில் அரை சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை வைபவ் சூரியாவான்சி பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு வங்கதேச அணியின் தற்போதைய கேப்டனான நஜ்முல் சாண்டோ 14 வயது 231 நாட்களில் இலங்கைக்கு எதிராக கடந்த 2013 ஆம் ஆண்டு அரை சதம் அடித்தார். தற்போது அந்த ரெக்கார்டை வைபவ் சூரியன்வாசி முறியடித்திருக்கிறார். வைபவுக்கு 13 வயது 187 நாட்கள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.