மும்பை : 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியுடன் பல பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய அந்த அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்கள். நடுவரிசையில் களமிறங்கிய முகமது ரயான் என்ற வீரர் மட்டும் அதிகபட்சமாக 35 ரன்கள் சேர்க்க அக்சத் ராய் 26 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 44 ஓவர் முடிவில் யுஏஇ அணி 137 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் யூதஜித் குஹா மூன்று விக்கெட்டுகளையும், சேத்தன் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்திக் ராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை அடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அண்மையில் 13 வயதில் ஐபிஎல் தொடரில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட வைபவ் சூரியவன்ஷி இன்றைய ஆட்டத்தில் தன்னுடைய அதிரடியை காட்டினார்.
46 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 6 இமாலய சிக்சர் 3 பவுண்டரி என 46 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். சூரியவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை யுஏஇ அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த தொடர் முழுவதும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய சூர்யவன்ஷி இன்று தனது டாப் கிளாஸ் சட்டத்தை வெளிப்படுத்தினார்.
மற்றொரு தொடக்க வீரரான ஆயுஷ் 51 பந்துகளின் 67 ரன்கள் எடுக்க இந்திய U19 அணி 16.1 ஓவரில் எல்லாம் விக்கெட்டுகளை இழக்காமல் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இந்திய ஏ அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது மட்டுமல்லாமல் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது ஜப்பான் , யூஏஇ அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.