லாகூர்: துபாயில் நடந்த U-19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் நடத்தை 'அறமற்றது' என பாகிஸ்தான் அண்டர் 19 பயிற்சியாளர் சர்ஃபராஸ் அகமது கடுமையாக விமர்சித்தார். 191 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடிய பாகிஸ்தானின் செயல்பாட்டை அவர் வெகுவாகப் பாராட்டினார். இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, ரன்னர்-அப் பதக்கங்களை வாங்க மறுத்தது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்பராஸ் அஹ்மத் பயிற்சியளித்த இளம் பாகிஸ்தான் அணி, இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது. சீனியர் கிரிக்கெட் போட்டிகளில் காணப்பட்ட, அதே பரபரப்பு இப்போட்டியிலும் பிரதிபலித்தது. இரு அணி வீரர்களும் மோதலிலும், வாக்குவாதத்திலும், வெளியேறும் வீரர்களுக்கு வழியனுப்பு சைகைகளிலும் ஈடுபட்டனர்.

இந்திய வீரர்கள், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து ரன்னர்-அப் பதக்கங்களை வாங்க மறுத்து, ஐ.சி.சி அதிகாரியிடம் அரங்கிற்கு வெளியே பெற்றுக்கொண்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சர்பராஸ் அஹமது,, “இந்தியாவின் நடத்தை நன்றாக இல்லை, அவர்களின் செயல்பாடு அறமற்றது. நாங்கள் விளையாட்டு மனப்பான்மையுடன் கொண்டாடினோம். கிரிக்கெட்டில் அது அவசியம். இந்தியா செய்தது அவர்களின் தன்னிச்சையான நடவடிக்கை தான்” என்று சாடினார்.
லீக் சுற்றில் இந்திய அணியிடம் தோற்றிருந்த பாகிஸ்தான், இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடியது. இந்திய அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, சமீர் மின்ஹாஸ் 172 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை எட்ட உதவினார். இலக்கை துரத்திய இந்திய அணி, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் தந்த அழுத்தத்தில் இருந்து மீளவில்லை. துல்லியமான பந்துவீச்சால் இந்தியாவை 27 ஓவர்களுக்குள்ளேயே 156 ரன்களுக்குள் சுருட்டினர்.
பாகிஸ்தான் அடுத்தடுத்து விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இந்தியாவின் ரன் குவிப்பு தடைபட்டது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷத்தையும் கட்டுப்பாட்டையும் சமாளிக்க முடியாமல், இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பாகிஸ்தானின் வெற்றிக்கு தனிப்பட்ட திறமை மட்டும் காரணமல்ல என சர்பராஸ் அஹ்மத் குறிப்பிட்டார். சமீர் மின்ஹாஸின் பங்களிப்பைப் போலவே அஹ்மத் ஹுசைனின் பங்களிப்பும் முக்கியமானது என்றார்.