மும்பை: கிரிக்கெட் தற்போது மாறி வருவதால் இந்தியாவில் வளரும் அடுத்த தலைமுறை கிரிக்கெட் அதிரடி பேட்ஸ்மேன்களாக உருவெடுத்து வருகிறார்கள். இதற்கு மிகப்பெரிய உதாரணம் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி தான்.அண்டர் 19 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 347 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 156 ரன்களில் சுருண்டது. இதற்கு முக்கிய காரணம் இந்திய வீரர்கள் கொஞ்சம் கூட நிதானத்தை கடைபிடிக்காதது தான் என கூறப்படுகிறது. குறிப்பாக சூரியவன்ஷி 10 பந்துகளை எதிர் கொண்டு 26 ரன்கள் சேர்த்தார்.

இதில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி அடங்கும். சூரியவன்ஷி அடித்த ஒரு பந்து, பௌண்டரி சென்றுவிட்டது என தெரிந்த உடன்,அவரே தன்மீது கோபப்பட்டார். இது தவறான விஷயம் ஆகும். அனைத்து பந்தும் சிக்ஸருக்கு தான் செல்ல வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் வீடியோ கேமில் தான் கிரிக்கெட் விளையாட வேண்டும்.
டி 20 போட்டியாக இருந்தாலும் சரி! ஒருநாள் கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சரி! அனைத்து பந்துகளையும் நான் சிக்ஸருக்கு அடிப்பேன் என்று நினைத்தால் உங்களுக்கு தோல்விதான் மிஞ்சும். கிரிக்கெட்டில் தற்போது அதிரடி எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நிதானமும் முக்கியம். களத்தின் சூழலை புரிந்து கொண்டு, அதிரடியையும் நிதானத்தையும் கலந்து எந்த ஒரு வீரர் தனது இன்னிங்ஸை கட்டமைத்து விளையாடுகிறாரோ, அவரே உலக கிரிக்கெட்டில் முடி சூடா மன்னனாக விளங்குகிறார்.
சிக்சர் மன்னன் என்று அழைக்கப்படும் கெயில், சேவாக், ரோகித் சர்மா போன்ற வீரர்களே முதலில் இன்னிங்சை கட்டமைத்து அதன்பின் தான் அதிரடியை காட்டுவார்கள். அதுவும் சேவாக் எல்லாம் ஆரம்ப காலத்தில் அப்படித்தான் விளையாடி வந்தார். இதனால் ஒருநாள் போட்டிக்கு என்ற ஒரு மரியாதை இருக்கிறது. எந்த பந்தை அடிக்க வேண்டும்.
எந்த பந்தை விட வேண்டும் என்பதை பார்த்து அதற்கு ஏற்ப ஷாட்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இது தற்போதைய தலைமுறை வீரர்களுக்கு கொஞ்சம் கூட இல்லை. வந்த வேகத்தில் பேட்டை சுற்றி ஆட்டம் இழந்து விடுகிறார்கள். இது டி20 போட்டிக்கு வேண்டுமானால் கை கொடுக்கலாம். ஆனால் ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளுக்கு தோல்வியே தரும்.
இதனால் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் இளம் வீரர்களை சந்தித்து அவர்களுக்கு பாடம் சொல்லித் தர வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். சூர்யவன்சி மட்டும் அல்லாமல் ஆயுஷ் மாத்ரே, ஆரோண் ஜார்ஜ், விகான் மல்ஹோத்ரா, அபிக்யான் குண்டு போன்ற வீரர்கள் இதே தவறை தான் செய்தார்கள். ஏதேனும் ஒரு போட்டியில் அதிரடி காட்டினால் பரவாயில்லை. ஆனால் அனைத்து போட்டிகளுமே நாம் பேட்டை சுற்றினால் ரன்கள் வரும் என்று நினைப்பது முட்டாள்தனமாகும். இந்த இளம் வீரர்கள் தங்களுடைய தவறை ஆரம்பத்திலேயே திருத்தி கொள்ள வேண்டும்.