புலவாயோ: அண்டர் 19 உலகக்கோப்பையில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. வங்கதேசத்தை வீழ்த்தி, சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு ஏறக்குறைய தகுதி பெற்றுவிட்டது இந்தியா. டாஸ் போடும்போது நடந்த சர்ச்சை, மழையின் குறுக்கீடு, 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷியின் உலக சாதனை என விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாமல் நடந்த இந்த ஆட்டம் பற்றி பார்க்கலாம்.
இந்தப் போட்டி தொடங்கும் முன்பே அனல் பறந்தது. டாஸ் போடும்போது இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே மற்றும் வங்கதேச துணை கேப்டன் ஜாவத் அப்ரார் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையானது.

அரசியல் மற்றும் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான மோதல் இளம் வீரர்கள் மத்தியிலும் எதிரொலித்தது. பின்னர் இது "கவனக்குறைவால் நடந்தது" என வங்கதேச வாரியம் மழுப்பினாலும், களத்தில் உரசல்கள் இருந்தது உண்மை.
டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ஆரம்பத்திலேயே 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய 14 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, வங்கதேச பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 67 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் விளாசினார் வைபவ்.
இதன் மூலம் அண்டர்-19 உலகக்கோப்பையில் அரைசதம் அடித்த மிக இளம் வயது வீரர் (14 வயது 296 நாட்கள்) என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
மேலும் யூத் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை அதிவேகமாகக் கடந்து, விராட் கோலியின் சாதனையை முறியடித்தார்.
இவருக்குத் துணையாக விக்கெட் கீப்பர் அபிஞான் குண்டு பொறுப்புடன் ஆடி 80 ரன்கள் (112 பந்துகள்) குவிக்க, இந்தியா 48.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வங்கதேச பந்துவீச்சாளர் அல் ஃபஹத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
239 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்கதேசம், ஒரு கட்டத்தில் 17.2 ஓவர்களில் 106/2 என வலுவான நிலையில் இருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரத்திற்குப் பின் ஆட்டம் தொடங்கியபோது, டிஎல்எஸ் (DLS) முறைப்படி 29 ஓவர்களில் 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது 70 பந்துகளில் 75 ரன்கள் தேவைப்பட்டது.
மழைக்குப் பின் ஆட்டம் மாறியது. இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே, பகுதிநேர பந்துவீச்சாளரான விஹான் மல்ஹோத்ராவை நம்பி பந்துவீச அழைத்தார். அந்த முடிவு ஆட்டத்தையே மாற்றியது. விஹான் மல்ஹோத்ரா தனது சுழற்பந்து வீச்சால் வங்கதேசத்தின் மிடில் ஆர்டரைச் சீட்டுக்கட்டு போலச் சரித்தார். 4 ஓவர்கள் வீசி வெறும் 14 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார் விஹான். சிறப்பாக ஆடிய வங்கதேச கேப்டன் அஜிசுல் ஹக்கீம் 51 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 146 ரன்களுக்குச் சுருண்டது.
இறுதியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் DLS முறையில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரூப் சுற்றில் தொடர்ந்து 2 வெற்றிகளைப் பதிவு செய்து, சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இந்தியா தகுதி பெறுவது உறுதியாகிவிட்டது.
வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே, "மழை இடைவேளை எங்களுக்குச் சாதகமாக அமைந்தது. டிரெஸ்ஸிங் ரூமில் நாங்கள் நம்பிக்கையுடன் பேசினோம். விஹான் மல்ஹோத்ரா போன்ற பார்ட்-டைம் பவுலர்கள் வீசும்போது பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என்று கணித்தேன். அது சரியாக நடந்தது" என்று மகிழ்ச்சி தெரிவித்தார். ஆட்டநாயகனாகத் தனது மேஜிக் பந்துவீச்சு மூலம் அணியை வெற்றி பெற வைத்த விஹான் மல்ஹோத்ரா தேர்வு செய்யப்பட்டார்.