புலவாயோ: இந்தியா மற்றும் வங்கதேச நாடுகள் இடையே நிலவி வரும் அரசியல் மற்றும் கிரிக்கெட் ரீதியான பனிப்போர், தற்போது ஜூனியர் உலகக்கோப்பை வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இன்று நடைபெற்ற யு-19 உலகக்கோப்பை போட்டியில், டாஸ் போடும்போது இரு அணி கேப்டன்களும் கைகுலுக்க மறுத்த சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வழக்கமாக போட்டி தொடங்கும் முன் நட்பின் அடையாளமாக கேப்டன்கள் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால் இன்று புலவாயோவில் நடந்த காட்சிகளோ வேறு விதமாக இருந்தன.
குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா - வங்கதேசம் மோதும் இந்தப் போட்டிக்கு முன்னதாக டாஸ் போடப்பட்டது. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், வங்கதேச அணியின் கேப்டன் அஜிசுல் ஹக்கீம் ஆடும் லெவனில் இருந்தும், அவர் டாஸ் போட வரவில்லை. அவருக்குப் பதிலாகத் துணை கேப்டன் ஜாவத் அப்ரார் தான் டாஸ் போட வந்தார்.

டாஸ் நிகழ்வின் போது, இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே மற்றும் வங்கதேச துணை கேப்டன் ஜாவத் அப்ரார் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. இருவரும் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2025 ஆசிய கோப்பை மற்றும் மகளிர் உலகக்கோப்பையின் போது, அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்திருந்தனர். தற்போது வங்கதேசத்துடனும் இந்தியா அதே பாணியைக் கையாண்டுள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் உள்ளன. ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டது, 2026 டி20 உலகக்கோப்பைக்காக இந்தியாவிற்கு வர வங்கதேசம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இராஜதந்திர உறவுச் சிக்கல்கள் ஆகிய காரணங்களால் பிசிசிஐ மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. அது தற்போது இளம் வீரர்கள் மத்தியிலும் எதிரொலித்துள்ளது.
மழை காரணமாகத் தாமதமாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற வங்கதேச துணை கேப்டன் ஜாவத் அப்ரார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஜாவத் அப்ரார் பேசுகையில், "பிட்ச்சில் ஈரம் அதிகமாக உள்ளது. முதல் 10-15 ஓவர்களுக்குப் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும். அதனால் பந்துவீசுகிறோம்." என்றார்.
ஆயுஷ் மத்ரே, "நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் பந்துவீச்சைத்தான் தேர்வு செய்திருப்போம். பிட்ச் ஈரப்பதமாக உள்ளது. கடந்த போட்டியில் பேட்டிங் கொஞ்சம் சறுக்கியது, ஆனால் இம்முறை சமாளிப்போம். அணியில் மாற்றமில்லை." என்றார்.
கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம் என்று சொல்லப்பட்டாலும், அரசியல் மற்றும் ஈகோ மோதல்கள் ஆடுகளத்தையும் ஆக்கிரமித்திருப்பது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.