மும்பை: தந்தையின் ஆசைக்காக கிரிக்கெட்டை கனவாக கொண்ட இந்திய யு19 அணியின் உதய் சாகரனின் பயணம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
யு19 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஆதார்ஷ் சிங் 76 ரன்களும், உதய் சாகரன் 64 ரன்களும் விளாசினர். இதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி வெறும் 45.5 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் உதய் சாகரன் சிறப்பாக பேட்டிங் செய்து ஆதிக்கம் செலுத்திய போது, வங்கதேச பவுலர்கள் சோர்வடைந்தனர். இதனால் அவரின் கவனத்தை திசைதிருப்ப, வழியை மறித்து நிற்காதே என்று இடித்து வங்கதேச வீரர் அரிஃபுல் கோபத்தை வெளிக்காட்ட, உடனடியாக கேப்டன் உதய் சாகரனும் பதிலுக்கு எகிறினார். இதனால் இரு வீரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட, நடுவர்கள் வந்து விலக்கிவிடும் சூழல் ஏற்பட்டது.
களத்தில் ஆக்ரோஷமாக காணப்பட்ட உதய் சாகரன், ஆசிய கோப்பையில் வங்கதேச அணியிடம் அடைந்த தோல்விக்கு உலகக்கோப்பையில் வைத்து பதிலடி கொடுத்தார். இந்திய அணி விளையாடி 2 பயிற்சி போட்டிகளிலும் அரைசதம் விளாசி அசத்திய உதய் சாகரன், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்து ஃபார்மில் இருப்பதை நிரூபித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரஷர் சூழலில் கவனம் சிதறாமல் விளையாடியது பலரையும் வியக்க வைத்துள்ளது.
19 வயதாகும் உதய் சாகரன், இந்திய அணியின் கேப்டனாக யாஷ் துல் செயல்பட்ட யு19 2022 உலகக்கோப்பை தொடரிலேயே ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டவர். அதுமட்டுமல்லாமல் இந்திய யு14, யு16, யு19 என்று அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தவர். ஆயுர்வேத மருத்துவரான இவரின் தந்தை சஞ்சீவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் உதய் சாகரன் கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். அதற்காக பஞ்சாப் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து சஞ்சீவ் தனது மகனுக்கு பயிற்சியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.