ஹராரே: 2026 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு 10வது முறையாக தகுதி பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல், அண்டர் 19 உலககோப்பை வரலாற்றில் இவ்வளவு பெரிய இலக்கை வெற்றிக்கரமாக எட்டிய அணி என்று வரலாற்று சாதனையை இந்திய அண்டர் 19 அணி படைத்துள்ளது.
ஜிம்பாப்வேவின் ஹராரோ நகரில் நடந்த இரண்டாவது அரையிறுதியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. ஃபைசல் ஷினோசாதா 93 பந்துகளில் 110 ரன்களும், உசைருல்லா நியாசாய் 86 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ரன்களும், எடுத்தனர்.

இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளமிட்டனர்.இந்தியா சார்பில் தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சௌஹான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். பதிலுக்கு 311 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தொடக்க வீரர், வைபவ் 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும்.இதன் முலம் 9.3 ஓவர்களில் இந்திய அணி 90 ரன்கள் சேர்த்தது. ஆரான் ஜார்ஜ், இந்த முக்கியப் போட்டியில் 115 ரன்கள் (104 பந்துகள்) குவித்து சதமடித்தார். விஹான் மல்ஹோத்ராவுடன் இணைந்து 96 ரன்கள் கூட்டணி அமைத்த அவர், அணியின் ஸ்கோர் 300 ரன்களை எட்டியபோது ஆட்டமிழந்தார்.
பின்னர் விஹான் மல்ஹோத்ரா 38* (47) மற்றும் வேதாந்த் திரிவேதி 4* (5) ஆகியோர் நிதானமாக ரன் சேர்த்து, மீதமிருந்த இலக்கை சுலபமாக எட்டினர். இறுதியாக, இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு கம்பீரமாக அடியெடுத்து வைத்தது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி பிப்ரவரி 6 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும்.
அரையிறுதியில் 311 ரன்களை இந்திய அண்டர் 19 அணி எட்டிய நிலையில், இந்த தொடர் வரலாற்றில் வெற்றிக்கரமாக சேஸ் செய்யப்பட்ட ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பாக, 2006ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி 305 ரன்கள் எடுத்தது. இதே போன்று 250 ரன்களுக்கு மேல் உள்ள இலக்கை 53 பந்துகள் எஞ்சிய நிலையில், ஒரே அணி இந்த தொடரின் வரலாற்றில் வெற்றிக்கரமாக சேஸ் செய்தது இதுவே முதல் முறையாகும்.
இதுவரை 16 முறை அண்டர் 19 உலககோப்பை நடைபெற்றுள்ளது. இதில் 10 முறை இந்திய அணி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை இந்திய அண்டர் 19 அணி 5 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், 6வது முறையாக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.