ஹராரே: ஜிம்பாப்வே-வில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. ஆனால், இந்த வெற்றியை விட ஸ்காட்லாந்து அணியை தொடரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என பாகிஸ்தான் அணி கடைபிடித்த உத்திதான் தற்போது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது. அதற்காக இந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் அணி வேண்டுமென்றே ரன் வேகத்தை குறைத்து விளையாடியது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 129 ரன்கள் என்ற எளிய இலக்கை பாகிஸ்தான் அணி துரத்தியது. ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய அந்த அணி, 14 ஓவர்களிலேயே 84 ரன்களை குவித்து வெற்றியின் விளிம்பில் நின்றது. அப்போது வெற்றிக்கு ஓவருக்கு 4 ரன்களுக்கும் குறைவாகவே தேவைப்பட்டது.

ஆனால், திடீரென ஆட்டத்தின் போக்கை பாகிஸ்தான் வீரர்கள் மாற்றினர். சமீர் மின்ஹாஸ் மற்றும் அகமது ஹுசைன் ஜோடி மிகவும் நிதானமாக விளையாடத் தொடங்கியது. அடுத்த 12 ஓவர்களில் ஓவருக்கு 3 ரன்கள் என்ற விகிதத்திலேயே அடித்தனர். குறிப்பாக 89 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் ஆட்டத்தை மெதுவாக நகர்த்தினர். இறுதியில் 26.2 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
பாகிஸ்தான் அணி நினைத்திருந்தால் 25.2 ஓவர்களுக்கு முன்னரே இந்த போட்டியை முடித்திருக்க முடியும். அப்படி முடித்திருந்தால், நெட் ரன் ரேட் அடிப்படையில் ஸ்காட்லாந்து அணி அடுத்த சுற்றான 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால், ஸ்காட்லாந்தை வெளியேற்றிவிட்டு ஜிம்பாப்வே அணியை அடுத்த சுற்றுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே பாகிஸ்தான் அணி வேண்டுமென்றே ஆட்டத்தை இழுத்தடித்தது தற்போது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் இப்படி செய்ததற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. உலகக்கோப்பை விதிமுறைப்படி, சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு செல்லும் அணிகள், தங்கள் பிரிவில் இருந்து தகுதி பெற்ற மற்றொரு அணிக்கு எதிராக பெற்ற புள்ளிகள் மற்றும் ரன் ரேட்டை மட்டுமே உடன் எடுத்துச் செல்ல முடியும்.
வெளியேறிய அணிக்கு எதிரான முடிவுகள் கணக்கில் கொள்ளப்படாது.
பாகிஸ்தான் அணி ஸ்காட்லாந்தை விட ஜிம்பாப்வேக்கு எதிராக சிறந்த ரன் ரேட் வைத்திருந்தது. எனவே ஜிம்பாப்வே அணி அடுத்த சுற்றுக்கு வந்தால், சூப்பர் சிக்ர் சுற்றில் பாகிஸ்தானின் ரன் ரேட் வலுவாக இருக்கும். இதற்காகவே அவர்கள் ஸ்காட்லாந்தை வெளியேற்றும் வகையில் காய் நகர்த்தினர் என கூறப்படுகிறது.
மேலும், சி பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி, ஸ்காட்லாந்தை 252 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. தற்போது ஸ்காட்லாந்து வெளியேறியதால், இங்கிலாந்தின் அந்த இமாலய ரன் ரேட் பயன் இல்லாமல் போனது. இதுவும் பாகிஸ்தானுக்கு மறைமுக நன்மை அளித்துள்ளது.
இது குறித்து பேசிய ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஆண்டி பிளவர், "இது மிகவும் தந்திரமான செயல் என்றாலும், விதிமுறைகளுக்கு உட்பட்டதே. அணியின் நன்மைக்காக செய்யப்பட்ட இந்த முடிவில் தவறு ஏதும் இல்லை" என்று ஆதரவு தெரிவித்துள்ளார். 1999 ஒருநாள் உலகக்கோப்பையில் ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இதேபோன்ற ஒரு உத்தியை கையாண்டது குறிப்பிடத்தக்கது. ஜிம்பாப்வேயின் தகுதி உறுதி செய்யப்பட்டவுடன், கடைசி நேரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் அதிரடி காட்டி சிக்ஸர்களுடன் ஆட்டத்தை முடித்தனர்.