பெனோனி : யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் வெல்வதற்காகவே இங்கு வந்திருப்பதாக ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் டாம் ஸ்ட்ரேக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. நவ.19ல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை வீழ்த்தி அசத்தியது. இதனால் யு19 உலகக்கோப்பை தொடரிலாவது இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளன. இந்த யு19 உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா இரு அணிகளும் ஒருமுறை கூட தோல்வியை சந்திக்கவில்லை.

அரையிறுதியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவையும், ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி இருந்தன. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால், எந்த அணி வெற்றிபெறும் என்பதை கணிக்க முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் டாம் ஸ்ட்ரேக்கர் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் எச்சரிக்கையை ஒத்து இருப்பதாக ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளன.
செய்தியாளர்களை சந்தித்து ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் டாம் ஸ்ட்ரேக்கர் பேசுகையில், நாங்கள் இங்கு அரையிறுதி போட்டியில் வெல்வதற்காக வரவில்லை. இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காகவே வந்திருக்கிறோம். அரையிறுதி போட்டியில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினேன். நாங்கள் இருந்த ஹோட்டலில் டிவி வைக்கப்பட்டிருந்தது. எனது சாதனை குறித்து வர்ணனையாளர்கள் பலரும் பேசினார்கள். ஆனால் அதனை பற்றி பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை.
அரையிறுதி போட்டியில் நிச்சயம் வெல்வோம் என்று நினைத்திருந்தோம். ஏனென்றால் 11வது வீரராக களமிறங்கிய ராஃப் மெக்மில்லன் மோசமான பேட்ஸ்மேன் கிடையாது. அதனால் கடைசி ரன்னை எடுத்த போது நாங்கள் ஆக்ரோஷமாக கொண்டாடினோம். ஆஸ்திரேலிய அணியிடம் மிகச்சிறந்த பவுலிங் அட்டாக் உள்ளது என்று நினைக்கிறேன். இந்த தொடரிலேயே சில அணிகளை எங்கள் பவுலிங்கின் மூலம் பீதியாக்கி இருக்கிறோம். அதனையே இந்திய அணிக்கு செய்ய விரும்புகிறோம்.
இந்த மைதானங்களில் நல்ல பவுன்ஸ் கிடைக்கிறது. உலகக்கோப்பை தொடர் முழுக்கவே நாங்களும் பவுன்சர் பந்துகளை நன்றாக பயன்படுத்தியுள்ளோம். மாலி, விட்லர் உள்ளிட்டோர் உற்சாகமாக பவுன்சர் வீசி வருகிறார்கள். தொடரின் அட்டவணை வெளி வந்த போதே, நாங்கள் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர் கொள்வோம் என்று கணித்திருந்தோம். இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால் பேட்டிங் vs பவுலிங் என்று இரு அணிகளுக்கும் சிறந்த போட்டியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.