பரோடா : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான யு19 உலகக்கோப்பை அரையிறுதியில் கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து இந்திய வெற்றிக்கு காரணமாக அமைந்த ராஜ் லிம்பானி குறித்து பார்க்கலாம்.
யு19 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. கடைசி 14 பந்துகளில் 17 ரன்கள் இந்திய வெற்றிக்கு தேவைப்பட்ட போது, 10வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரஜ் லிம்பானி, தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சரை விளாசி இந்திய அணி பக்கம் ஆட்டத்தை திருப்பினார்.

பவுலரான ராஜ் லிம்பானி, தேர்ந்த பேட்ஸ்மேனை போல் சிக்சரை விளாசியது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கூச் பெகார் டிராபியில் 3 அரைசதங்களை அடித்தவர் தான் ராஜ் லிம்பானி. அதனால் அவர் பவுலிங்கிற்கு இணையாக பேட்டிங்கும் செய்யக் கூடிய வீரர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்திய யு19 அணியில் 18 வயதிலேயே 140கிமீ வேகத்தில் பவுலிங் செய்யக் கூடிய ஒரே வேகப்பந்துவீச்சாளர் ராஜ் லிம்பானி தான். என்சிஏவில் இவரது வேகத்தை பார்த்து பயிற்சியாளர்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர். அதன்பின்னரே ராஜ் லிம்பானிக்கு இந்திய யு19 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயியின் மகனான ராஜ் லிம்பானி, ஒவ்வொரு நாளும் 45 கிமீ சைக்கிளில் சென்று பள்ளிக் கூடத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்.
இதுகுறித்து ராஜ் லிம்பானி பேசுகையில், எங்கள் வீட்டின் பொருளாதார சூழல் சொல்லிக் கொள்ளும்படி இருக்கவில்லை. ஆனாலும் எனது கிரிக்கெட் கனவிற்காக அனைவரும் உடனிருந்தனர். 2017ம் ஆண்டு எனது கிரிக்கெட் திறமையை வளர்த்து கொள்வதற்காக வதோதராவுக்கு மாற்றமடைந்தேன். அங்குள்ள மோதிபாக் கிரிக்கெட் கிளப்பில் இருந்து தான் தினமும் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வந்தேன்.
கூச் பெஹார் டிராபி, சிகே நாயுடு தொடர் உள்ளிட்டவற்றில் அங்கிருந்தே விளையாடினேன் என்று தெரிவித்துள்ளார். வதோதராவில் உள்ள கிரிக்கெட் கிளப்பிற்கும் நான் தங்கியிருந்த வீட்டிற்கும் இடையிலான தூரம் 14 கிமீ. போக்குவரத்திற்காக செலவு செய்யும் அளவிற்கு சூழல் அமையாததால், தினமும் சைக்கிளில் சென்றுள்ளார் ராஜ் லிம்பானி. ஆனால் பின்னாட்களில் அவரின் எனர்ஜி குறையாமல் இருப்பதற்கும், அதிகளவு வேகத்தில் வீசுவதற்கும் அவரது சைக்கிள் பயணமே காரணமாக அமைந்துள்ளது.