மும்பை : இந்திய அண்டர் 19 கிரிக்கெட் கேப்டனாக களம் இறங்கி உலக கோப்பையை வென்ற யாஷ் தூல் தற்போது இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்கும் சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அண்டர் 19 கிரிக்கெட் கேப்டனாக களமிறங்கிய யாஷ் தூல், 2022 உலக கோப்பையில் களமிறங்கி இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இதன் மூலம் அடுத்த விராட் கோலி கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோலி போல் டெல்லியில் இருந்து பிறந்து வந்த யாஷ் தூல், கடந்த 2023 ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக பங்கேற்றார். எனினும் அவர் எதிர்பார்த்தபடி பெரிய அளவில் சாதிக்கவில்லை.

இந்த நிலையில் யாஷ் தூல், எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்காமல் இருந்தார். அண்மையில் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிவிக்கப்பட்ட நிலையில் யாஷ் தூல் பெயர் எந்த ஒரு அணியிலும் இடம் பெறவில்லை. தற்போது தான் அதற்கு என்ன காரணம் என தெரியவந்துள்ளது.
தேசிய கிரிக்கெட் அகாடமியில் எப்போதும் போல் உடல் சோதனை நடைபெற்றிருக்கிறது. அப்போது அவருடைய இதயத்தில் ஓட்டை இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து பிசிசிஐ மருத்துவ குழு யாஷ் தூலை தீவிரமாக கண்காணித்தனர். அதில் யாஷ் தூலின் பிரச்சினையை தீர்க்க இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனை அடுத்து யாஷ் தூல்க்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு அனைத்து செலவையும் பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. பல நாள் ஓய்வுக்கு பிறகு யாஷ் தூலை சோதனை செய்த மருத்துவ குழு அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பச்சை கொடி காட்டியது.
எனினும் பழைய மாதிரி அவரால் விளையாட முடியவில்லை. அண்மையில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் யாஷ் தூல் கடுமையாக சொதப்பி இருக்கிறார். இந்த நிலையில் தமக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறித்து யாஷ் தூல் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், என்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்து முடிந்து விட்டது.
அதிலிருந்து நான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றேன். என்னால் பழைய படி விளையாட முடியவில்லை என்றாலும் நான் பாசிட்டிவாக இருக்கின்றேன். என்னுடைய கிரிக்கெட்டுக்காக நான் 100% உழைப்பை கொடுக்க விரும்புகின்றேன். மீண்டும் பழையபடி நான் விளையாடுவேன் என்று யாஷ் தூல் தெரிவித்து இருக்கிறார். 21 வயதான யாஷ் தூல் தற்போது ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மூலம் மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்து இந்திய அணிக்கு இடம் பிடிக்க முயற்சி செய்வார் என தெரிகிறது.
விராட் கோலிக்கு பிறகு அண்டர் 19 உலக கோப்பையை வென்ற எந்த கேப்டனும் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. 2012 ஆம் ஆண்டு உன்முகுத் சந்த் அடுத்த கோலியாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய ஃபார்ம் குன்றி தற்போது இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார்.
இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு பிரித்வி ஷா தலைமையில் இந்திய அண்டர் 19 உலகக்கோப்பையை வென்றது. ஆனால் அவரும் வந்த வேகத்திலேயே இந்திய அணியை விட்டு சென்று தற்போது மீண்டும் அணியில் இடம் கிடைக்க போராடி வருகிறார். இந்த வரிசையில் உலக கோப்பை வென்ற பிறகு தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு தள்ளாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.