மும்பை : 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய நிலையில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற ஜப்பான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஆயுஷ் மாத்ரே மற்றும் 13 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷி ஆகியோர் அபாரமாக விளையாடினர்.

குறிப்பாக 13 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மற்றொரு வீரரான ஆயுஸ் மாத்ரே 29 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். இதில் ஆறு பவுண்டரி, நான்கு சிக்சர்கள் அடங்கும். இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஆண்டிரே சித்தார்த் 48 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார்.
நடுவரிசையில் களமிறங்கிய கேப்டன் முகமது ஆமன், அபாரமாக விளையாடி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 118 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார். கேப்டன் ஆமானுக்கு உறுதுணையாக கார்த்திகேயா 57 ரன்கள் எடுக்க இறுதியில் ஹரிதிக் ராஜ் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பவுண்டர் என 12 பந்தில் 25 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்தது.
340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜப்பான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஹூகோ கெலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடிக்க, மற்ற வீரர்களை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நடுவரிசையில் சார்லஸ் மட்டும் டென்னிஸ் இன்னிங்ஸ் போல் ஆடி 68 பந்தில் 35 ரன்கள் எடுத்து, கடைசி வரை களத்தில் நின்று ஜப்பான் அணி ஆல் அவுட் ஆகாமமலி பார்த்து கொண்டார். ஜப்பான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. 211 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஏ பிரிவில் 3வது இடத்தில் உள்ளது.