கோலாலம்பூர்: 2024 அண்டர் 19 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அண்டர் 19 மகளிர் அணி, வங்கதேச அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்திய அண்டர் 19 மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தியது.
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் அண்டர் 19 மகளிர் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் முன்னேறி இருந்தன. நிக்கி பிரசாத் தலைமையில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணி ஒருபுறம் விக்கெட்களை இழந்து கொண்டு இருந்த நிலையில் கொங்காடி திரிஷா அபாரமாக ஆடி அரை சதம் அடித்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்கதேச அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 76 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியில் கொங்காடி திரிஷா 47 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அவரே இந்த போட்டியின் சிறந்த வீராங்கனைக்கான விருதையும் வென்றார். இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. அதன் காரணமாக குறைவான ஸ்கோர் எடுத்த போதும் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஆயுஷி சுக்லா 3 விக்கெட்களையும், பாருனிகா சிசோடியா 2 விக்கெட்களையும், சோனம் யாதவ் 2 விக்கெட்களையும், வி ஜே ஜோஷிதா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பேட்டிங்கில் 52 ரன்கள் சேர்த்த கொங்காடி திரிஷா பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். அவர் மூன்று ஓவர்கள் பந்து வீசி 10 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்தார்.