ஜூனியர் உலகக் கோப்பை.. முதல் போட்டியிலேயே வங்கதேசம் அதிரடி வெற்றி
சிட்டகாங்: ஜூனியர் உலகக் கோப்பையாக வர்ணிக்கப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் போட்டியிலேயே வங்கதேசம் அணி அதிரடி வெற்றியை ருசித்தது.
11-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் இன்று துவங்கியது. பிப்ரவரி 14-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் வங்காளதேசம், நமிபியா, ஸ்காட்லாந்து, தென்ஆப்பிரிக்கா, 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், கனடா, பாகிஸ்தான், இலங்கை, 'சி' பிரிவில் இங்கிலாந்து, பிஜி, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, 'டி' பிரிவில் இந்தியா, அயர்லாந்து, நேபாளம், நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி ஆஸ்திரேலியா இந்த முறை ஜூனியர் உலக கோப்பையில் இருந்து விலகி விட்டது.
முதல் நாளான இன்று சிட்டகாங்கில் நடந்த ஆட்டத்தில் வங்காளதேசம்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்க தேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து 43 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications