கேப் டவுன் : அண்டர் 19 உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிக்கு அருகே வந்து தோல்வியை தழுவியது. இந்திய கேப்டன் உதய் சாகரன் மற்றும் சச்சின் தாஸின் அபார பேட்டிங்கால் இந்திய அணி பெரும் சரிவில் இருந்து மீண்டு 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததை நம்ப முடியாமல் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கண் கலங்கினர். பொதுவாக தென்னாப்பிரிக்க சீனியர் அணி உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் எல்லாம் ஏதோ ஒரு சொதப்பல் செய்து அரை இறுதியுடன் வெளியேறுவதை வாடிக்கையாக கொண்ட அணியாக இருக்கிறது.

அந்த பெயரை முதன் முதலில் அண்டர் 19 அளவில் 2014 அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் உடைத்தது. அந்த வகையில் வகையில் தென்னாப்பிரிக்க அண்டர் 19 அணி மீது எப்போதுமே நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல், இந்த முறை அண்டர் 19 உலகக்கோப்பை தொடரே தென்னாப்பிரிக்காவில் தான் நடைபெற்றது.
அதனால், நம் சொந்த மண்ணில் உலகக்கோப்பை வென்று காண்பிக்க வேண்டும் என்ற பெரிய கனவுடன் அரை இறுதி வரை முன்னேறியது தென்னாப்பிரிக்கா. அந்த அணியின் வேகப் பந்துவீச்சு தான் இந்த தொடரில் ஆடிய அணிகளிலேயே சிறந்ததாக இருந்தது.
இந்தியாவுக்கு ஏற்றயான எதிரான அரை இறுதியில் முதலில் பேட்டிங் செய்து 244 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க அணி, பின்னர் பந்துவீச்சில் இந்திய அணியை 32 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற அளவிற்கு சரிவில் தள்ளியது. அரை இறுதி என்ற அழுத்தம் வேறு இருப்பதால் எப்படியும் இந்திய அணி அதில் இருந்து மீளாது என தென்னாப்பிரிக்கா நினைத்த வேளையில், இந்திய அணி கேப்டன் உதய் சகாரன் மற்றும் சச்சின் தாஸ் கூட்டணி அமைத்து 171 ரன்கள் சேர்த்தனர். அதனால் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் சொந்த மண்ணில் உலகக்கோப்பை அரை இறுதி தோல்வியை ஏற்க முடியாமல் கண் கலங்கினர். தென்னாப்பிரிக்க அணி கேப்டனும் கண் கலங்கினார். இந்த நிலையில், இந்திய அணி கேப்டன் உதய் சாகரன் அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். அது நெகிழ வைக்கும் காட்சியாக இருந்தது. 19 வயதே நிரம்பிய இளம் வீரர் என்றாலும் இந்திய கேப்டன் உதய் சாகரனிடம் எதிரணிக்கு ஆறுதல் கூறும் குணம் இருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.