கேப் டவுன் : 2024 அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்தியா - நேபாள அணிகள் மோதின. இந்தப் போட்டியில் விராட் கோலியை மானசீக குருவாக கொண்ட உதய் சாகரன் மற்றும் சச்சினை பின்பற்றும் சச்சின் தாஸ் என இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் போட்டி போட்டு சதம் அடித்தனர். அவர்களின் ரன் குவிக்கும் போட்டியில் சிக்கிய நேபாள அணி பந்துவீச்சில் சோர்வடைந்து சொதப்பியது. அடுத்து பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு ஈடு கொடுக்க முடியாத நேபாளம் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
2024 அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இந்தியா குரூப் ஏ பிரிவில் இடம் பெற்று வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. அடுத்து சூப்பர் சிக்ஸ் சுற்றில் தன் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை 214 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்து இருந்தது. இந்த நிலையில் தன் இரண்டாவது மற்றும் கடைசி சூப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டியில் நேபாள அணியை சந்தித்தது.

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் ஆதர்ஷ் சிங் 21, அர்ஷின் குல்கர்னி 18, பிரியான்ஷூ மோலியா 19 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினர். மிடில் ஆர்டரில் நான்காம் வரிசையில் களமிறங்கிய கேப்டன் உதய் சாகரன் மற்றும் ஐந்தாம் வரிசையில் இறங்கிய சச்சின் தாஸ் ஆகிய இருவரும் 62 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழப்பு என்ற இடத்தில் இருந்து கூட்டணி அமைத்து அபார ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
உதய் சாகரன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சச்சின் தாஸ் 101 பந்துகளில் 116 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி 3 ஓவர்கள் இருக்கும் போது களமிறங்கிய முஷீர் கான் 7 பந்துகளில் 9 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது.
குட்டி கோலியான உதய் சாகரன் மற்றும் குட்டி சச்சினான சச்சின் தாஸ் ஆகியோரிடம் சிக்கி நேபாள அணி தடுமாறியது. 298 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி ஆடிய நேபாள அணி ஆமை வேகத்தில் ஆடியது. 50 ஓவர்கள் வரை ஆல் - அவுட் ஆகாமல் இருந்த அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர்களில் சௌமி பாண்டே 4 விக்கெட்களும், அர்ஷின் குல்கர்னி 2 விக்கெட்களும் வீழ்த்தினர். ராஜ் லிம்பானி, ஆராத்யா, முருகன் அபிஷேக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அண்டர் 19 அணி 132 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.