கேப் டவுன் : அண்டர் 19 உலகக்கோப்பை அரை இறுதியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி சேஸிங்கில் 32 ரன்களுக்கு
4 விக்கெட்களை இழந்து தட்டுத் தடுமாறிக் கொண்டு இருந்த போது விராட் கோலியை பின்பற்றும் இந்திய அணி கேப்டன் உதய் சாகரன் ஒரு திட்டத்தை கையில் எடுத்தார். அது இந்திய அணியை அரை இறுதியில் வெற்றி பெறச் செய்து, அண்டர் 19 இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் ப்ரீடோரியஸ் 76 ரன்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிச்சர்ட் 64 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் ராஜ் லிம்பானி 3, முஷீர் கான் 2, நமன் திவாரி 1, சௌமி பாண்டே 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து இந்திய அணி 245 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய போது இன்னிங்ஸின் முதல் பந்தில் துவக்க வீரர் ஆதர்ஷ் சிங் டக் அவுட் ஆனார். பின்னர் இந்திய அணி 32 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. அப்போது கேப்டன் உதய் சாகரன் மற்றும் சச்சின் தாஸ் ஜோடி சேர்ந்தனர். சச்சின் ஓரளவு ரன் சேர்க்க, உதய் சாகரன் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த முடிவு செய்து ஆமை வேகத்தில் ஆடினார். ஒரு கட்டத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 33 ஆக இருந்தது. இப்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகளில் கூட இப்படி யாரும் பேட்டிங் செய்வதில்லை.
ஆனால், உதய் சாகரனின் அந்த ஆமை வேக ஆட்டம் எனும் ஆயுதம் இந்திய அணிக்கு கை கொடுத்தது. அவர் விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்ள நிதான ஆட்டம் ஆட மறுபுறம் சச்சின் தாஸ் அதிரடி ஆட்டம் ஆடி வேகமாக ரன் குவித்தார். இந்த திட்டத்தை முறியடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறினர்.
பின்னர் சச்சின் 96 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் சென்ற பின் இந்தியா வரிசையாக மூன்று விக்கெட்களை இழந்தது. 48.4வது ஓவரில் உதய் சாகரன் 124 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் சமன் ஆகி இருந்தது. அதற்கு அடுத்த பந்தில் லிம்பானி ஒரு ஃபோர் அடிக்க இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடையும் என்றே பலரும் எண்ணிய நிலையில் கேப்டன் உதய் சாகரன் தூணாக நின்று கேப்டன் இன்னிங்க்ஸ் ஆடியும், சச்சின் தாஸ் நிலைமையை உணர்ந்து அவுட் ஆகாமல் 96 ரன்கள் குவித்தும் அணியை வெற்றி பெற வைத்தனர். இந்திய அணி அண்டர் 19 இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.